கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு; 4 ஊழியர்கள் சிக்கினர்

கோவை: கோவை கோனியம்மன் கோவிலில் நடந்த உண்டியல் திருட்டு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் விசாரணை நடத்தினார். 4 ஊழியர்கள் உண்டியல் பணத்தை திருடியது உறுதியானதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது.

மொத்தமுள்ள 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடந்திருக்கிறது.

ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை.

தற்காலிக உண்டியல்களை டிராலியில் எடுத்துச் சென்றனர். கலையரங்கத்துக்கு பின்னால் சென்று, உண்டியலில் இருந்த பணத்தை ஒரு ஊழியர் எடுத்து, தனது பையில் வைப்பதை பக்தர் பார்த்திருக்கிறார். அவர், சென்னையில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றார். விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள ‘சிசி டிவி’ கேமராக்களில், 15ம் தேதி பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் விசாரணை நடத்தினார்.உண்டியல் பணத்தை பாலசுப்ரமணியன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும், ரூ.31,000 இருந்ததாகவும், மறுநாள் அத்தொகையை 4 பேரும் பிரித்துக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவர்கள் மீது வழக்கு பதிந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க, உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில், கோவில் செயல் அலுவலர் குமார் புகார் கொடுத்திருக்கிறார். எப்.ஐ.ஆர்., பதிவு செய்த பின், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு மீது பயம்!

கோவில் உண்டியல் திருட்டு தொடர்பான விசாரணையில், 4 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். கண்டிப்பாக வழக்கு பதிய வேண்டுமா அல்லது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்துக் கொள்கிறீர்களா என போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டு உள்ளது. புகார் கொடுக்காமல் மன்னிப்பு கொடுத்து விட்டு விட்டால், இவ்விஷயத்தில் ஊழியர்கள் தப்பிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்கிற குற்றச்சாட்டு எழும். செயல் அலுவலர் உட்பட அனைவரையும் தமிழக அரசு ‘சஸ்பெண்ட்’ செய்யலாம் என்கிற அச்சத்தால், கண்டிப்பாக வழக்கு பதிய வேண்டும் என கூறி, ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Source link