உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான ஹர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஹர்முஸ் நீரிணைக்கு “டிரம்ப் நீரிணை” என பெயர் மாற்றம் செய்யலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமெரிக்காவைப் போலவே இந்த நீரிணையும் முன்பைவிட மிகவும் “சூடாக” இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹர்முஸ் நீரிணை ஏன் முக்கியம்?
பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இணைக்கும் ஹர்முஸ் நீரிணை, சர்வதேச அளவில் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிசக்தி வளங்களின் போக்குவரத்தில் இந்த நீர்வழித்தடம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனால், ஈரான் தொடர்பான போர் பதற்றம் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் ஹர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால செயல்பாடு சர்வதேச கவனத்தை ஈர்க்கிறது.
ஒன்டாரியோ ஏரியை தொடர்ந்து புதிய பெயர் சர்ச்சை
கனடாவுடனான வர்த்தக மோதலுக்கு மத்தியில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் ஒன்டாரியோ ஏரியின் பெயரை “அமெரிக்கா ஏரி” என மாற்ற டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கை கனடா தரப்பில் எதிர்ப்பையும் சர்வதேச அளவில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஹர்முஸ் நீரிணையின் பெயரையும் மாற்றுவது தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
அடுத்த நடவடிக்கை என்ன?
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு, சர்வதேச எல்லைகள் போர் நடவடிக்கைகள், பொருளாதாரத் தடைகள், சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிரடியான கருத்துகளையும் முடிவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
குறிப்பாக, சில நேரங்களில் சமூக வலைதளங்களில் அவர் முன்வைக்கும் கருத்துகள் முதலில் சர்ச்சைக்குரிய அல்லது வேடிக்கையான பதிவுகளாக பார்க்கப்பட்டாலும், பின்னர் அவை அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளாக மாறிய நிகழ்வுகளும் உள்ளன.
