டில்லி போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலை குற்றவாளிகள்; விசாரணையில் அம்பலம்

நமது டில்லி நிருபர்

டில்லியில் பார்லிமென்டை நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியின் போது வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள் என டில்லி போலீசார் தெரிவித்தனர்.

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாகக் கூறி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற அமைப்பு, டில்லியில் போராட்டத்தை தொடங்கியது. 20 நாட்களாக அமைதியான முறையில் நடந்த போராட்டம், கடந்த 20ல் வன்முறையாக வெடித்தது. ‘போராட்டத்தில் பங்கேற்றோரை பார்லிமென்டை நோக்கி செல்லுங்கள்’ என, அக்கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே அறிவுறுத்தினார்.

இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பார்லி.,யை நோக்கி ஓடத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்த முயற்சித்த போலீசாருக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தாக்கியதில், 100க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார்களை தாக்கிய மற்றும் வாகனங்களைச் சேதப்படுத்திய குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 2,873 குற்றவாளிகளை போலீசார் எவ்வாறு விசாரித்தனர் என்பதை, போலீஸ் கமிஷனர் அனுராக் குமார் அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை விவரிக்கிறது. அவர்களில், 989 பேருக்குக் கொடூரமான குற்றங்களில் முன் குற்றப் பின்னணி இருந்தது கண்டறியப்பட்டது.

குற்றப் பின்னணி கொண்ட இந்த நபர்கள் மீதான கைது மற்றும் விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர வாய்ப்புள்ளது; மாணவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் விபரம் பின்வருமாறு:

* கொலை வழக்கு நிலுவையில் உள்ள நபர்கள்: 101 பேர்

* கொலை முயற்சி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்: 62 பேர்

* வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள்: 284 பேர்

* ஆயுதச்சட்டத்தின் கீழ் வழக்கில் சிக்கியவர்கள்: 229 பேர்

* ஆட்கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளவர்கள்: 19 பேர்

* போக்சோ வழக்கில் சிக்கியவர்கள்; 6 பேர்

* பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள்: 61 பேர்

* போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள்: 67 பேர்

பார்லிமென்டை நோக்கி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியின் போது நடந்த வன்முறையில், கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான 101 நபர்கள், வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட 284 பேர், மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட 92 பேர் ஈடுபட்டிருந்தனர் என தங்களது விசாரணையில் தெரியவந்துள்ளதாக டில்லி போலீசார் தெரிவித்தனர்.

மாணவர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள், மதவெறியர்கள், இந்தியா வளர்வதை பிடிக்காதவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க செயல்களை செய்திருப்பது தற்போது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

Source link