சென்னை: ‘வழக்கறிஞர்களும் மற்றவர்களை போலவே சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்; அதை சிறப்புச் சலுகை கோர முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சி – சென்னை இடையிலான சுங்கச்சாவடியில், வழக்கறிஞர்களுக்கு கட்டண விலக்கு கோரி, கடந்த 2024ம் ஆண்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, சுங்கச்சாவடியை நடத்தி வரும் ஒப்பந்ததாரர் அளித்த புகாரில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜ்குமார், கள்ளக்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோர் மீது, உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததற்கான ஆதாரம் இல்லை. அதேபோல், மனுதாரர்கள் குற்றம் செய்யும் நோக்கில் செயல்பட்டதற்கான ஆதாரமும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த போராட்டத்துக்கான காரணம், வழக்கத்துக்கு மாறானது. இருப்பினும், ஜனநாயக ரீதியிலான கருத்து வெளிப்பாடே, இந்த போராட்டம். சட்டப்படி, பொது மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்கும்போது, வழக்கறிஞர்களும் அதை செலுத்த வேண்டியது கட்டாயம்; வழக்கறிஞர்கள் என்பதால் மட்டும் கட்டணம் செலுத்துவதில் இருந்து சிறப்பு சலுகை கோர முடியாது. உளுந்துார்பேட்டை நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
