தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாகத் தனியார் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. ஆரோக்கியா நிறுவனத்தைத் தொடர்ந்து அமிர்தா, வேதா, சன், ராஜ், சக்ரா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை ஜூலை 26 முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பால் உற்பத்தி குறைவு, கொள்முதல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருள்களின் விலை ஏற்றம் ஆகியவற்றைக் காரணமாகக் காட்டித் தனியார் நிறுவனங்கள் விற்பனை விலையை உயர்த்திய போதிலும், பால் முகவர்களுக்கான ‘கமிஷன்’ மற்றும் ஊக்கத்தொகையை உயர்த்த முன்வரவில்லை. எரிபொருள் செலவு, கடை வாடகை, ஊழியர்களின் ஊதியம் போன்ற பல்வேறு செலவினங்களைக் கருத்தில் கொண்டு, பால் முகவர்களுக்குச் சதவீத அடிப்படையில் கமிஷனும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மொத்தமாக லிட்டருக்கு ரூ.6 வரை விலை உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் விலை குறைவாகக் கிடைக்கும் ஆவின் பாலை அதிகளவில் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவின் பாலுக்குக் கடும் தட்டுப்பாடு உருவாகும் வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்க மாநில அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
