சென்னை
தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் இருந்து கொரோனா பாதித்த 20 பேரின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 20 மாதிரிகளிலும் ஆர்.எப்-5 வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக பொது சுகாதார துறையின் இயக்குநர் சோமசுந்தரம் கூறும்போது, தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 15 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். பொது மக்கள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
கூட்டங்களை தவிர்க்க வேண்டும்
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பெரிய கூட்டங்களை தவிர்க்க வேண்டும். தற்போது அதிக ஆபத்து உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா பாதிப்புகள்
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் வழக்கமான கண்காணிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026-ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 335 கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
2025-ம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2024-ம் ஆண்டில் 990 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை அனைத்தும் வழக்கமான கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டவை என்றும் பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தன என்றும் சுகாதார துறை தெரிவித்துள்ளது.
அச்சம் தேவையில்லை
தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ், ஒமைக்ரான் ஆர்.எப்-5 வகை என்பது மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியம் கொண்டதல்ல என்றும் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
