தர்மபுரி,
தமிழ்நாட்டின் முக்கிய பட்டுக்கூடு உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழும் தர்மபுரி பட்டுக்கூடு ஏல அங்காடியில், கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பிலான பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவியும் பட்டுக்கூடுகள்
தர்மபுரி மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு தொழில் மிக முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இங்குள்ள அரசு பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தர்மபுரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, இதன் சுற்றுவட்டார மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டு விவசாயிகளும் தங்களது பட்டுக்கூடுகளை அதிக அளவில் இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நல்ல விலை
இங்கு கொண்டு வரப்படும் பட்டுக்கூடுகளுக்கு தரத்தின் அடிப்படையில் நல்ல விலை கிடைப்பதால் இங்கு பட்டுக்கூடுகளை கொண்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்தவர்களும் தர்மபுரிக்கு வந்து பட்டுக்கூடுகளை வாங்கி செல்கிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பட்டுக்கூடுகள்
தமிழ்நாட்டில் பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி இடத்தை தர்மபுரி மாவட்டம் பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த 6 மாதங்களில் தர்மபுரி ஏல அங்காடிக்கு தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 70 ஆயிரத்து 917 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ரூ.18 கோடியே 67 லட்சம் மதிப்பில் பட்டுக்கூடகள் விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் 4,100 விவசாயிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் பயன் அடைந்துள்ளனர்.
பட்டு நூற்பாலை
தர்மபுரிக்கு பட்டுக்கூடு வரத்து அதிகரித்துள்ளதால் இங்கு தேவையான கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரியில் பட்டு நூற்பாலை அமைக்கும் திட்டம் ஆய்வு நிலையில் உள்ளது. தர்மபுரியில் பட்டு சார்ந்த புதிய தொழில்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் பட்டுக்கூடு சார்ந்த வேலை வாய்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
