நேற்று நாடாளுமன்றத்தில் ‘பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026’ மீதான விவாதம் நடந்தது.
அதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது…
“நீதிபதியினுடைய அருவருப்பான சிந்தனையும் ஆளுங்கட்சியினுடைய அராஜகமான சிந்தனையும் இணைந்து உருவாக்கிய கரப்பான் பூச்சிகள் தற்போது இந்த மசோதாக்கள் முழுவதும் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
மோடி – அமித் ஷாவுக்கு எதிரான இளைஞர்களின் ஆட்டம் சாதாரண ஆட்டம் அல்ல. 12 ஆண்டு காலம் ட்ரம்பிடம் மட்டுமே மண்டியிட்ட மோடியை முதல் முறையாக மாணவர்களிடம் மண்டியிட வைத்த பெருமை ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு உண்டு.

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து பிரதமரை காப்பாற்றி இருக்கிறார். அவ்வளவுதான். மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்வதாக அவர் சொல்கிறார்.
மே மூன்றாம் தேதி வினாத்தாள் கசிந்தது, 83 நாட்கள் எங்கே போனார்? ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டிருக்கிறது.
ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு குற்றத்திற்கும் ஒருவர் கூட தண்டனை பெறவில்லை என்றால் ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் அந்த ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.
2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் காலத்திலே ஏற்பட்ட வினாத்தாள் கசிவு வழக்கு இன்றைக்கு வரை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்து இந்த நாடாளுமன்றத்தில் கேட்கிறோம்.
அரியலூர் அனிதாவில் துவங்கி, மதுரை ஜோதிஸ்ரீ துர்காவிலிருந்து கோயம்புத்தூர் கோபிகா வரை எண்ணற்ற மாணவர்களை பலிகொடுத்த துயரத்தின் வழியிலே இருந்து சொல்கிறோம்.
நீட் என்பது டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. நீட் என்பது மாநில உரிமையை குழிதோண்டிப் புதைக்கிறது. நீட் என்பது மாணவர்களின் தன்னம்பிக்கையை ஒழித்து தற்கொலைக்கு தள்ளுகிறது.

எனவே நீட்டை கைவிடுங்கள், NEP-ஐ கைவிடுங்கள். கார்ப்பரேட் மயமாகிற கல்வி கொள்கையை கைவிடுங்கள்.
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருகிற ஒரு மசோதாவை தாக்கல் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இந்தக் கண்துடைப்பு மசோதாவால் எந்த வேலையும் ஆகப்போவதில்லை.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜன் குழு மிக முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டது.
2010-ஆம் ஆண்டு நீட் அறிமுகமாவதற்கு முன்பு மாநில கல்வி திட்டத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு போன மாணவர்கள் 2,330 பேர். சிபிஎஸ்இ-லிருந்து போனவர்கள் வெறும் 14 பேர்தான்.
ஆனால் நீட் அறிமுகமான பிறகு சிபிஎஸ்இ-லிருந்து போனவர்கள் 1,604 பேர். நீட் அறிமுகமாவதற்கு முன்பு கிராமப்புற மாணவர்கள் 65% பேர் மருத்துவக் கல்லூரிக்கு போனார்கள். இப்பொழுது வெறும் 49% ஆக அது குறைந்திருக்கின்றது.
இந்த போராட்டம் நுழைவுத் தேர்வு குறித்து ஒரு பெரிய கவனத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கு பின்பு இருப்பது நிர்வாக பிரச்சனை அல்ல, அரசியல் கேள்வி”. என்றார்.
