தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிதொடர்பாக தேர்தல் கமிஷனுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும், தேர்தல் கமிஷனுக்கு எதிராக கோல்கட்டாவில்லை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலவரையற்ற தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது: இந்திய வரலாற்றில் முதல்முறையாக தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர உள்ளன. இதற்கான அறிக்கை தயார் செய்யப்பட்டுவிட்டது. இந்த வாரத்தில் லோக்சபாவில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்மானத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்பி கூறுகையில்,” 100 சதவீதம் இது குழு முயற்சி தான். ஒரே எண்ணம் கொண்ட கட்சிகள் இணைந்து இந்த தீர்மானத்தை தயாரித்துள்ளோம். பார்லிமென்டின் இரு அவைகளிலும், இணைந்து செயல்படுவோம். தலைமை தேர்தல் கமிஷனர், தனது பதவியின் தரத்தை குறைத்து விட்டார்” எனத் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் எம்பிக்களிடம் இருந்து கையெழுத்து பெறும் நடவடிக்கை நடந்து வருகிறது. சட்ட விதிமுறைகளின்படி லோக்சபா எம்பிக்கள் 100 பேர், ராஜ்யசபா எம்பிக்கள் 50 பேர் இந்த தீர்மானத்தில் கையெழுத்துப் போட வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

வதிமுறைகள் என்ன

சுப்ரீம் கோர்ட் நீதிபதிஅல்லது ஐகோர்ட் நீதிபதியை பதவியில் இருந்து நீக்கும் நடைமுறைகள் போன்றே தலைமை தேர்தல் கமிஷனரை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.தவறான நடத்தை அல்லது பதவியில் தொடர முடியாது என நிரூபிக்க வேண்டும். மேலும், பார்லிமென்டின் ஏதாவது ஒரு அவையில் தீர்மானத்தை கொண்டு வருவதுடன், அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அரசியல்சாசனம் வகுத்துள்ள விதிமுறையாகும்.

Source link