திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா… சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் பவனி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா 6-ம் நாள் இரவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆவணித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சிவன் கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

வெள்ளி தேரில் பவனி

மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானையுடனும், சுவாமி ஜெயந்திநாதரும் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளித் தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Source link