சென்னை பழவந்தாங்கலில் திருமணம் நிச்சயமாகி, பின்னர் குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்ற நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படும் இளைஞர், அவரை ஹெல்மெட்டால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில் வசிக்கும் 24 வயது பெண்ணுக்கும், நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த முகமது சையது அபுபக்கர் என்பவருக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்றுவிட்டது.
இதையடுத்து, முகமது சையது அபுபக்கர் அந்த பெண்ணை தொடர்ந்து பின்தொடர்ந்து சென்று, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் ஹெல்மெட்டால் தாக்குதல்
இந்த நிலையில், மூவரசன்பேட்டை மெயின் ரோட்டில் அந்த பெண் நடந்து சென்றுகொண்டிருந்தபோது முகமது சையது அபுபக்கர் அவரிடம் பேசியதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முகமது சையது அபுபக்கர் ஹெல்மெட்டால் அந்த பெண்ணை தாக்கியதாகவும், பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த பெண்ணுக்கு 7 தையல்கள் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னை தாக்கி மிரட்டிய முகமது சையது அபுபக்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் பழவந்தாங்கல் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது
புகாரின் அடிப்படையில் பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது சையது அபுபக்கர் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஹெல்மெட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
துணிச்சலாக களமிறங்கிய பெண்!இளைஞர்கள் செய்த கொடூரம் கஞ்சா தான் காரணம்?
மேலும், போலீசாரின் விசாரணையில் முகமது சையது அபுபக்கர்செல்போன் கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருவது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட முகமது சையது அபுபக்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
