திருவாரூர்: 300 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த தலைமை காவலர் சஸ்பெண்ட்; 3 பேர் கைது!

திருவாரூரில் 300 வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 மதுபான பாட்டில்கள் மற்றும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட வாளவாய்க்கால் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பொறுப்பு காவல்துறை ஆய்வாளர் வள்ளி தலைமையில் நேற்று மதியம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த காரில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 300க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த காரில் பயணித்த மூன்று பேரை கைது செய்து மதுவிலக்கு காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பரவக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் கார்த்திகேயன் 40,

என்பவர் மது பாட்டில்களை கடத்தி வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார் 35, அருண்குமார் 39 உள்ளிட்ட மூன்று பேரும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சியூர் பகுதியில் இருந்து நெடுவாக்கோட்டை பகுதிக்கு வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மூன்று பேரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து இது போன்ற மது பாட்டில்களை வேறு எப்போதெல்லாம் கடத்தி இருக்கிறார்கள் என்பது குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கடத்தலின் முதல் குற்றவாளியாக கருதப்படும் தலைமை காவலர் கார்த்திகேயன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினரிடமே, காவலர் ஒருவர் மது கடத்தி வந்து சிக்கியுள்ள சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Source link