ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டும் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தமிழக வெற்றிக் கழக அரசு தொடர்ந்து கைது செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது விவகாரம்
விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்ப்பட்டதை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மார்க்கண்டேயனை சந்திக்க சென்ற வழக்கறிஞர், மருந்துகளை வழங்க சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவரின் அடிப்படை சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி.வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையினரை ஏவி விடுவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , திமுகவினரை அடக்க பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் என்றும், மார்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கண்டனம்

முதலமைச்சர் விஜய் குறித்து வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயனுக்கு, அமைச்சர் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து முதலமைச்சர் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தனது X தளத்தில் கண்டித்துள்ளார்.
மேலும் மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், தோல்வி விரக்தியில் திமுகவினர் அநாகரிகமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே, சட்டப்பேரவைத் தலைவர், மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
