சி. கொத்தங்குடி கிராமத்தில் இயங்கி வரும் இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு ஒரு ஆசிரியரை கொண்டு 6 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றதால் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்தச் சூழலில், ஓராண்டுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற ஈஸ்வரி, வீடு தோறும் சென்று அரசு பள்ளிகளின் தரம், கல்வித் தரம் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு சலுகைகள் குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அவரது தொடர் முயற்சியின் பலனாக, இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை 18 ஆக உயர்ந்தது. இதையடுத்து, இரு ஆசிரியர் பள்ளியாக மாற்றப்பட்டு ஜெயலட்சுமி என்ற ஆசிரியரும் நியமிக்கப்பட்டனர். இதனை ‘மூடும் நிலைக்குச் சென்ற அரசு பள்ளியை மீட்டெடுத்த பள்ளியின் தலைமை ஆசிரியர்’ என்ற தலைப்பில் நக்கீரன் இணையத்தில் கடந்த 20-ஆம் தேதி மாலை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வைரலானது. இதைப் பார்த்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கஜேந்திரன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி பள்ளிக்கு நேரில் வந்து, மாணவர் சேர்க்கையை உயர்த்திய தலைமை ஆசிரியர் ஈஸ்வரியை சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும், தங்களது சார்பில் பள்ளிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினர். இதனை தொடர்ந்து கூடுதலாக 3 மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர்.
அதேபோல், செய்தியை அறிந்த சமூக ஆர்வலரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியருமான ஞானகுமார், மற்றும் அவரது உதவியாளர் சமூக ஆர்வலர் கார்த்தி ஆகியோர் பள்ளிக்குச் சென்று மாணவர்களின் நிலையை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவர்களுக்கு அரசு வழங்கிய ஒரே ஒரு சீருடை மட்டுமே இருப்பதை அறிந்த அவர், 21 மாணவர்களுக்கும் ரூ.22 ஆயிரம் மதிப்பில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஷூ, சாக்ஸ், டை மற்றும் புதிய சீருடைகள், இனிப்புகளை வழங்கினார். அதேபோல் வரும் பண்டிகை காலங்களிலும் புதிய உடை உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதாகவும் பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
நக்கீரன் இணைய செய்தியைத் தொடர்ந்து பள்ளிக்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதுடன், தலைமை ஆசிரியர் ஈஸ்வரி மற்றும உதவி ஆசிரியர் ஜெயலட்சுமியின் அர்ப்பணிப்பு பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த மனிதநேய நடவடிக்கைகள் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
