நமது சிறப்பு நிருபர்நாடு முழுவதும் 653 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்கள்,

நமது சிறப்பு நிருபர்

நாடு முழுவதும் 653 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் இந்த பள்ளிகள் இருக்கின்றன. முழுமையான இலவசக்கல்வி, சிபிஎஸ்இ பாடத்திட்டம், ஊரகப்பகுதி மாணவ, மாணவியருக்கு வசதி என்பவை உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் இந்த பள்ளிகளால் கிடைக்கின்றன.

அப்படி இருந்தும், தமிழக அரசு மட்டும் இந்த பள்ளிகளுக்கு அனுமதி மறுக்கிறது. ‘நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது, அது எங்கள் கொள்கைக்கு விரோதமானது’ என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே கீறல் விழுந்த ரெக்கார்டு போல தமிழக அரசு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தை போலவே மொழி உணர்வு மிகுந்த மாநிலம் மேற்கு வங்கம். அங்கு இதுவரை பாஜ ஆட்சிக்கு வந்ததே இல்லை. அது மட்டுமின்றி, அந்த மாநிலத்தில் இருக்கும் மம்தா பானர்ஜி அரசுக்கும், மத்திய பாஜ அரசுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஆனாலும், அங்கு நவோதயா பள்ளிகள் 20 மாவட்டங்களில் செயல்படுகின்றன. அதுபோலவே, பாஜ இதுவரை ஆட்சிக்கே வந்திராத கேரளத்தில், 14 மாவட்டங்களிலும் தலா ஒரு பள்ளி வீதம், 14 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன.

மூச்சுக்கு மூச்சு, மத்திய பாஜ அரசை எதிர்க்கும் கேரள அரசும், மேற்கு வங்க அரசும் கூட, நவோதயா பள்ளிகளால் கிடைக்கும் நன்மையை கருத்தில் கொண்டு, அவற்றை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழக அரசு மட்டும் வீம்புக்காக, நவோதயா பள்ளிகளை வர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. ஏழை, கிராமப்புற மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நவோதயா பள்ளிகளை தமிழகத்திலும் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.

சிறப்பு அம்சங்கள்

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவோதயா வித்யாலயா சமிதி சார்பில் நவோதயா பள்ளிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளின் சிறப்பு அம்சங்கள்:

* ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

* இரு பாலரும் படிக்கும் பள்ளி

* உண்டு உறைவிடப்பள்ளிகள். மாணவ, மாணவியருக்கு உணவு, தங்குமிடம், சீருடை, புத்தகங்கள் அனைத்தும் இலவசம்.

* ஊரகப்பகுதிகளை சேர்ந்த திறன் மிக்க மாணவ, மாணவியரை கை துாக்கி விடுவதே இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம்.

மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமையாசிரியர் சு.மனோகரன், தினமலர் நாளிதழின் இது உங்கள் இடம் பகுதிக்கு எழுதிய கடிதம் விவரம்: கடந்த 1986ம் ஆண்டு கல்விக் கொள்கையில், கிராமப்புற மாணவர்கள் தரமான கல்வி பெற மாவட்டந்தோறும், ‘ஜவஹர் நவோதயா’ எனும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன.

இப்பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது என்ற ஒற்றை காரணத்தைக்கூறி, தமிழகத்தை ஆண்ட, ஆளும் திராவிட கட்சிகள் நவோதயா பள்ளிகளை திறக்க மறுத்து வருகின்றன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் மறுக்கப்படுவது, இங்குள்ள கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்

இதுவா சமூக நீதி?

தமிழர்களுக்கு செய்யும் இத்துரோகத்தை மொழிப்பற்று என்றும், சமூகநீதி என்றும் தி.மு.க., கூறுவதை, இங்குள்ள ஒரு கூட்டம் வழிமொழிவது அவர்களது அறியாமையை காட்டுகிறது.

குடிசை தொழில் போல் குக்கிராமங்களில் கூட ஆங்கிலப் பள்ளிகள் வந்து விட்டன; இப்பள்ளிகள் தமிழில் பேச தடை விதிக்கின்றன. அதேபோன்று, மாவட்டந்தோறும் எண்ணற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தரப்படுகிறது.

இதனால் எல்லாம் அழியாத தமிழ், எட்டாம் வகுப்பு வரை தாய்மொழியில் படிக்கலாம் என்ற நிபந்தனையுடன் மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி வருவதால், அழிந்துவிடும் என்று கூறுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? அரசு பள்ளிகளின் கல்வித் தரம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதும், அதன் கல்வித்தரம் குறித்த தரவுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதும் படிக்காத பாமரர் கூட அறிவர்.

எல்லாம் நாடகம்

அதை வைத்து, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று கொண்டாடுவதும், மத்திய அரசு தரும் கல்வி திட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று மறுப்பதும் அரசியல் ஆதாயத்திற்காக, தி.மு.க., நடத்தும் நாடகம். ஹிந்தி திணிப்பை எதிர்க்கவே, நவோதயா பள்ளிகளை ஏற்க மறுக்கிறோம் என்று கூறும் தி.மு.க., அரசு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை தடைசெய்ய வேண்டியது தானே?

ஏன் அதற்கு மட்டும் அனுமதி? தாங்கள் நடத்தும் கல்வி வியாபாரம் படுத்துவிடக் கூடாது என்பதே காரணம்!

இந்நிலை எப்போது மாறும்?

தங்கள் வியாபாரம் செழிக்க ஹிந்தி கற்பிக்கும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வேண்டும்; தங்கள் அரசியல் வியாபாரம் படுத்து விடாமல் இருக்க நவோதயா பள்ளிகள் வேண்டாமா? மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தி.மு.க.,வின் இந்த குள்ளநரி தந்திரத்திற்கு தமிழக மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுத்தால் மட்டுமே இந்நிலை மாறும்!

இவ்வாறு அந்த கடிதத்தில் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Source link