நமது நிருபர்
”இப்பொது இருக்கும் அதிமுக முகமூடி தான். அதிமுக என்ற கட்சி ஒன்றே தமிழகத்தில் இல்லை” என தமிழக வந்துள்ள காங்கிரஸ் எம்பி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் தெரிவித்தார்.
பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பேசியதாவது: தமிழகத்திற்கு வருவது இங்கு உரை நிகழ்த்துவது எப்போதும் மரியாதைக்குரிய விஷயமாகும். தமிழகத்தில் உரை நிகழ்த்துவது எப்போதும் எனக்கு பெருமை; என் இதயத்தில் தமிழக மக்களுக்கு முக்கிய இடம் உள்ளது. தமிழக மக்கள் மீதும், தமிழ் மீதும் எனது அளவு கடந்த அன்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. நான் தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனது குடும்பம் இங்கு இல்லாவிட்டாலும் எனது உணர்வு இங்கு ஒன்றியிருக்கிறது.
எவ்வளவு தைரியம்
நான் காஷ்மீரை சேர்ந்தவன்; அங்கு செல்லும் இல்லத்திற்கு செல்வது போல தோன்றும். தமிழக மக்களுடான எனது உறவு மேம்பட்டுள்ளது. தமிழக மக்கள் மீதான பாஜ, ஆர்எஸ்எஸ் தாக்குதல், என் மீதான தாக்குதல் போன்றது. இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ்மொழி, தமிழக மக்கள் மீது தாக்குதல் நடத்துவார்கள். தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி நடந்தது. இதற்கு தான் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த நிறைவேறவில்லை.
மகத்துவம்
பாஜ, ஆர்எஸ்எஸ் எண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனது கருத்து, மொழி, கலாசாரத்தை பாதுகாப்பதற்கு உரிமை உண்டு. தமிழ்மொழி, கலாசாரத்தை அழிக்க நினைக்கிறார்கள். அதனை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தமிழர்களின் மகத்துவத்தை புரிந்து கொள்ள பாஜ மறுக்கிறது. பிரதமர் மோடி, அமித்ஷா பேச்சை கேட்கும் நபர்களை முதல்வர் பதவிக்கு தேடுகின்றனர். பார்லியில் தமிழர்களின் குரலை நசுக்க முயற்சி நடக்கிறது. தமிழர்களின் குரலை ஒடுக்க நடந்த முயற்சியை முறியடித்தோம்.
மிரட்டியதில்லை
சமூகநீதியை தேசத்திற்கே தமிழகம் காட்டியுள்ளது. பாஜ ஒட்டுமொத்த வாழ்நாளிலும் தமிழர்களையும், தமிழ்மொழியையும் தொட முடியாது. அடிப்படையிலேயே பாஜ தமிழினத்திற்கு எதிரானது. தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழர்களே தீர்மானிக்க வேண்டும். தமிழையும், தமிழக மக்களையும் காப்பதே முதல் குறிக்கோள். அதிமுகவை முற்றிலுமாக பாஜ முடித்துவிட்டது. கூட்டணி கட்சிகளை நாங்கள் மிரட்டியதில்லை. கூட்டணி கட்சிகளை மிரட்ட ஒருபோது காங்கிரஸ் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தியது இல்லை.
முகமூடி தான்
இப்பொது இருக்கும் அதிமுக முகமூடி தான். பாஜவின் உண்மை முகத்தை மறைக்கும் முகமூடி அதிமுக. அதிமுக என்ற ஒன்றே தமிழகத்தில் இல்லை. இந்தியாவை 2,3 கம்பெனிகள் ஆள முயற்சி செய்கிறது. நான் தமிழையும், தமிழ்மொழியையும் பாதுகாப்பேன். இது அனைத்து கட்சியினருக்கும் தெரியும். தமிழகத்தை டில்லியில் இருந்து ஆள வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் எதிர்பார்க்கின்றனர். தமிழக முதல்வர் தங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். காங்கிரஸ், திமுக, கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.
சிவக்குமார் பேச்சு
முன்னதாக, கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேசியதாவது: தமிழகத்தின் முடிவை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து உற்றுநோக்கி உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது; பாஜ தற்போது தாய்மொழியை புறக்கணித்து, ஹிந்தியை திணிக்க முயற்சிக்கிறது. அனைவரும் முதலில் தாய் மொழியை மதித்து, அதன்பின் மற்ற மொழிகளுக்கு மதிப்பு தர வேண்டும்.
ராகுலை பிரதமராக முன்மொழிந்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் எதிர்காலம், இண்டி கூட்டணி கையில்; தமிழகத்தின் எதிர்காலம் மக்கள் கையில் உள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி மூன்றில் இரண்டு பங்குடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். இவ்வாறு சிவக்குமார் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
பொன்னேரியில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் பிரசாரம் பேசினார். தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
