நாகர்கோவில்,
நாகர் கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.
நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை ஜங்ஷன் அருகே அமைந்துள்ள நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் ஆவணி மாத கொடை விழா நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு நிர்மாலய தீபாராதனை, 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பின்னர் பிற்பகல் 12 மணிக்கு உச்ச கால தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு சாயராட்சை நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
விளக்கேற்றி பூஜை செய்த பெண்கள்
மாலை 5.30 மணிக்கு சுமங்கலி பூஜை விழா சேவா பாரதி மாவட்ட செயலாளர் வித்யா ஜோதி கீதா ராமகிருஷ்ணன் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. சுமங்கலி பூஜையை ஆதிலெட்சுமி காமராஜ் தொடக்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.
