நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: 'இந்தியாக் கூட்டணி பேசப் போகும் பிரச்னைகள் என்னென்ன?' – கார்கே லிஸ்ட்

இன்று முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

ஏகப்பட்ட பிரச்னைகளுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் பிளான் செய்துள்ளன. அந்தப் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், காங்கிரஸ் கட்சியும் இந்தியாக் கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகளும் பொதுமக்களின் குரலாக ஒலித்து, ஒவ்வொரு விவகாரத்திலும் மோடி அரசிடம் இருந்து பதில்களைக் கோரும்.

ராமர் கோயில்
ராமர் கோயில்

ஸ்ரீ ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தங்களது உழைப்பில் வந்த பணத்தைப் பக்தி சிரத்தையுடன் காணிக்கையாக வழங்கினர்.

இந்நிலையில், கோவில் காணிக்கைகளில் நடந்துள்ள திருட்டு மற்றும் நம்பிக்கைத் துரோகம் தொடர்பான விவகாரத்தில் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

எனவே, இது குறித்து உடனடியாக ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, முழு கணக்கு விபரங்களும் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும்.

அதேபோல், வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வி முறையின் வீழ்ச்சி தொடர்பான விவகாரத்தில்—2014 முதல் இப்போது வரை 152 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன, இதனால் 25 குழந்தைகள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

அதைப்போலவே, 3.5 கோடி வாகன உரிமையாளர்கள் மீது எத்தனால் கலப்பை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் விவகாரம்—இதை அரசாங்கம் ஒரு ‘பரிசோதனை’ என்று அழைக்கிறது. பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டும்தான் பா.ஜ.க-வின் ஒரே ஆயுதமா?

பெட்ரோல்
பெட்ரோல்

இந்த விவகாரங்கள் தவிர, பிற முக்கியப் பிரச்னைகள் மற்றும் வரவிருக்கும் மசோதாக்கள் நாட்டின் மக்களைப் பாதிக்கும் கேள்விகளாக உருவெடுத்துள்ளன.

‘இந்தியாக் கூட்டணி’ எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு விவகாரத்திலும் அரசிடமிருந்து பொறுப்புக்கூறலை வலியுறுத்திக் கேட்கும்.

மக்களின் உரிமைகள், மக்களின் குரல் மற்றும் மக்களின் நம்பிக்கைகளுக்கான இந்தப் போராட்டம் முழு பலத்துடன் களத்தில் முன்கொண்டு செல்லப்படும்”



Source link