“நான் செத்தா நீ திருந்துவியா?”… திருமணமான 3 மாதத்தில் காதல் மனைவி செய்த காரியம்..

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பதிலாக, தற்கொலையை தீர்வாக நினைக்கும் மனநிலை அதிகரித்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு கூட ஒரு இளம் பெண்ணின் உயிரை பறித்துள்ள நிலையில், கடலூரில் நடந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்த பாலமணிகண்டனும், அதே பகுதியை சேர்ந்த நிவேஷாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால், கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு, பாலமணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது நிவேஷாவுக்கு தெரியவந்தது. தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், அதை நிவேஷா அடிக்கடி கண்டித்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதமும் குடும்ப தகராறும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் குடும்பத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று பாலமணிகண்டன் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த நிவேஷா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து அறைக்குள் சென்ற பாலமணிகண்டன், மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மன உளைச்சலில் அவர் வீட்டில் இருந்த வேட்டியை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு உயிர் காப்பாற்றினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நிவேஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலமணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 100 மீட்டர் வரை பைக்கில் இழுத்துச் செல்லப்பட்ட காதலி… நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Source link