நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் நேரில் உதவி கேட்ட பள்ளி தோழர்

புதுடெல்லி,

தனக்கு சொந்தமான கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு, பிரதமர் மோடியை அவரது பள்ளி தோழரான 81 வயது முதியவர் நேரில் சந்தித்து கண்ணீருடன் புகார் மனு அளித்துள்ளார்.

சிறுவயது நண்பர்கள்

அஸ்கரலி வோஹ்ரா, பிரதமர் மோடியும் குஜராத் மாநிலம் வாட்நகரில் உள்ள பி.என். மேல்நிலை பள்ளியில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது. கடந்த 1989-ஆம் ஆண்டு மராட்டியத்தின் பயந்தர் கிழக்கு பகுதியில் சுமார் 2,810 சதுர மீட்டர் நிலத்தை சட்டப்பூர்வமாக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

போலி ஆவணங்கள்

கடந்த 2011-ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து, பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ-வுக்கு தொடர்புடைய கட்டுமான நிறுவனங்கள் எனது நிலத்தை அராஜகமாக ஆக்கிரமித்து கொண்டன. இதுகுறித்து கடந்த 2015-ல் போலீசில் புகார் அளித்தும், பல ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் காவல் நிலையங்களில் அலைந்து திரிந்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

பிரதமரிடம் உருக்கமான மனு

இதனால், வேறு வழியின்றி தனது பள்ளி பருவ நண்பரான பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்துள்ளார். இந்த நில ஆக்கிரமிப்பு மோசடி குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரிடம் மனு அளித்துள்ளார்.

உள்ளாட்சி நிர்வாகம்

பிரதமர் மோடியை அவரது பள்ளி தோழர் நேரில் சந்தித்ததை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரதமரின் தலையீட்டை அடுத்து, உள்ளூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதமரின் நேர்மறையான பதிலால் எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று முதியவர் அஸ்கரலி வோஹ்ரா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Source link