காத்மாண்டு: ‘நேபாள தேசிய அடையாள அட்டையை, இந்தியாவில் செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்க வேண்டும்’ என, மத்திய அரசிடம் நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.
அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டுக்கு விமானத்தில் வருவதற்கு, பாஸ்போர்ட் அல்லது குடியுரிமை சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், நேபாளத்தின் தேசிய அடையாள அட்டையையும் பயண ஆவணமாக அங்கீகரிக்குமாறு, நம் அரசுக்கு நேபாளம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, நேபாள குடியேற்ற துறை செய்தி தொடர்பாளர் டிகா ராம் தாகல் கூறியதாவது:
நேபாள தேசிய அடையாள அட்டையை செல்லுபடியாகும் பயண ஆவணமாக அங்கீகரிக்கக் கோரி, இந்தியாவுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.
இதுதொடர்பாக காத்மாண்டுவில் உள்ள இந்திய துாதரகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இந்தியாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், பாஸ்போர்ட், குடியுரிமை சான்றிதழுடன், தேசிய அடையாள அட்டையும் செல்லுபடியாகும் மூன்றாவது ஆவணமாக அமையும். இதற்கு இந்திய அரசு விரைவில் சாதகமான பதில் அளிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
