புதுடில்லி: பார்லியில் பேசிய பேச்சுக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்தார்.
டில்லியில் நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேச அனுமதிக்கப்படவில்லை. நான் பேசுவதற்கு ஏற்ப அவையை அமைதிப்படுத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு அமித்ஷாவை நான் விமர்சித்ததே காரணம் என தெரிவித்தனர். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அவர் தான் காரணம். நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டால் பேச அனுமதி கிடைக்கும் என உறுதி அளித்தனர். ஆனால், பாஜ, ஆர்எஸ்எஸ் அல்லது அவர்கள் தொடர்புடைய அமைப்பிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.
டில்லி வீதிகளில் மாணவர்கள் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் சான்றிதழை நான் பார்த்துள்ளேன். ஒரு சிறுவனை காவலர் கன்னத்தில் அறைய முயன்றதை நீங்கள் காண முடியும்.நாங்கள் பார்லிமென்டில் இருந்த போது, போலீஸ் அதிகாரிகளை அமித்ஷா அழைத்ததை நான் பார்த்தேன். அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் அமித்ஷா பல முறை தொலைபேசியில் பேசினார். டில்லி தெருவில் நடந்தது அனைத்தும் அவருக்கு தெரியும். தடியடிக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம். பெல்லட் குண்டுகளை சுட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்து வருகிறோம்.இதனை செய்த போலீஸ் அதிகாரிகள் யார் என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு ராகுல் கூறினார்.
