”பெத்தி” படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு.. இதுதான் காரணமா!

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்தி’ படத்தில் ராம் சரண் நடித்துள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிக செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வருகிற 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பெத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் படக்குழுவினர் மாற்றம் செய்துள்ளனர். அதனை அறிவிக்கும் விதமாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

முதலாவதாக, எங்கள் பாடல்களுக்கும் முன்னோட்டங்களுக்கும் நீங்கள் அளித்த அற்புதமான வரவேற்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ‘பெத்தி’ படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பையும் உற்சாகத்தையும் கண்டு நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம்.

படத்தின் வசனக் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன; இனி ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. படத்தின் படத்தொகுப்புப் பணியை (edit) நாங்கள் பார்வையிட்டோம்; அதன் இறுதி வடிவம் கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

இத்தகைய சிறந்த உள்ளடக்கத்தை நாங்கள் கையில் வைத்திருப்பதால், அதைச் சாத்தியமான மிகச் சிறந்த முறையில் உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறோம். அதற்காக, எங்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பின்னணிப் பணிக்குழுவினருக்கும் (post-production team) இன்னும் சிறிது கூடுதல் அவகாசம் அளிப்பது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்; அப்போதுதான் அவர்களால் தங்கள் முழுத் திறமையையும் முழுமையான துல்லியத்துடன் வெளிப்படுத்த இயலும். உங்களுக்குச் சிறந்ததொரு திரையரங்க அனுபவத்தை மட்டுமே வழங்குவது எங்கள் கடமையாகும்.

எனவே, படத்தின் வெளியீட்டை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். வெளியாகும் சரியான தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் தொடர் ஆதரவிற்கும் பொறுமைக்கும் நன்றி. இது எங்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக உள்ளது. அன்புடன், பெத்தி படக்குழு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link