சென்னை: ”டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்கள் உண்மையான மாணவர்களே கிடையாது,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
டில்லியில், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தும், சி.ஜே.பி., எனப்படும் கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரசை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
பின், சென்னை கமலாலயத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது:
டில்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை, கம்யூனிஸ்ட் கட்சிகளும், சி.ஜே.பி.,யும் சேர்ந்து நடத்துகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தேர்வை எதிர்த்து, தற்போது போராடும் சி.ஜே.பி.,க்கு பின்னால் காங்கிரஸ் நிற்கிறது.
டில்லியில் போராட்டம் நடத்துவோர் யாரும் உண்மையான மாணவர்கள் கிடையாது. வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு பெரிய ரவுடி அங்கு வந்தார். அதன் பின்தான் டில்லியில் வன்முறை நடந்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக போராடுவோர் ஏன் பாலஸ்தீன கொடியை ஏந்துகின்றனர். லோக்சபாவில் எப்போதெல்லாம் முக்கியமான மசோதா கொண்டுவரப்படுகிறதோ, அப்போதெல்லாம், காங்கிரஸ் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறது.
டில்லியில் இப்போது திட்டமிட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. இது, தேச துரோக செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.
