இஸ்லமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள் 32 பேரும் எதிரிகள் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா பேசியிருப்பது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிகள், அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது உள்ளிட்டவைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்ததோடு, ராவல்கட் நகரில் இருந்து அம்மாநில தலைநகராக முசாபராபாத் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர்.
இவர்களை தடுக்க முயன்ற போலீசார் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர், போராட்டக்காரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 32 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அரசு நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நியாயப்படுத்தியுள்ளார். மேலும், போராட்டக்காரர்களை எதிரிகள் என்றும் அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
