மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் கவனத்திற்கு… – ஜோதிமணி எம்.பி.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக நீலிக்கண்ணீர் வடிப்போர் கவனத்திற்கு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, 2023 செப்டம்பர் மாதத்திலேயே, அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இரண்டரை ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, நேற்று முன்தினம் இரவுதான் மோடி அரசு இதற்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாளைக்கே கூட இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியும். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மோடி அரசுக்கு இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீது உண்மையான அக்கறை இல்லை; மாறாக, தமிழ்நாடு உட்பட தென், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்துவதற்கான ஒரு கேடயமாகவே அவர்கள் இதைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். தொகுதி மறுவரையறை தொடர்பான அவர்களின் இந்தச் சதித் திட்டம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளால் மிக உறுதியோடு முறியடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள், தமிழ்நாட்டின் உரிமைகளையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறோம்.

இதே உறுதியோடு போராடி, ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link