மும்பை: ” பொது மக்களை அதிகாரிகள் அலைக்கழிக்கக்கூடாது. அவர்களுக்காக பணியாற்ற வேண்டும்,” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மும்பையில் நாரிமன் பாயின்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: ஐஆர்எஸ் நிர்வாகத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும், மக்களின் பிரச்னைகளை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள அனுபவமே உதவும்.
அரசு துறைகள் மெத்தனமாக செயல்படுவது என்பது குடிமக்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துவதுடன் பொதுச் சொத்துகளுக்கு மோசமான நிர்வாகத்திற்கும் வழிவகுக்கும். இதனால் பொதுச்சொத்துகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன. பொதுச் சேவையில் நேர்மை முக்கியமானதாக இருக்க வேண்டும்.உங்களின் அதிகாரம் பயன்படும் இடங்களில், மக்களை அலைக்கழிக்க கூடாது. அவர்களுக்காக பணியாற்ற வேண்டும்.
அதற்காக விதிகளை மீறவோ, மற்றவர்களுக்கு சாதகமாகவோ நடந்து கொள்ள வேண்டும் என்பது அல்ல. மாறாக தங்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகளை பெற மக்கள் சிரமப்படக்கூடாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
