மதுராந்தகத்தில் சிபிஎம், தாராபுரத்தில் சிபிஐ போட்டி… மூ.வீரபாண்டியன் அறிவிப்பு

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து அக்கட்சிகளின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) போட்டியிடும். தாராபுரம் இடைத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) போட்டியிடும். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நாளை மறுதினம் (15-ந்தேதி) அறிவிக்கப்படுவார்கள்.

இந்த இடைத்தேர்தல் இயல்பானது அல்ல; திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் யாருடைய கூட்டணியிலும் இல்லை; கவர்னர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம். மதச்சார்பின்மைக்கு எதிராக தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link