மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக பரந்தாமன் களமிறங்குகிறார். திமுக சட்டத்துறை இணைச் செயலாளரான அவருக்கு இடைத்தேர்தலில் களம் காணும் வாய்ப்பினை திமுக தலைமை வழங்கியுள்ளது. இதனையடுத்து மதுராந்தகம் தொகுதியில் முழு வீச்சில் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் பரந்தாமன். இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என அவர் பேசியுள்ளது கவனம் பெற்று வருகிறது.
இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுராந்தகம் மக்கள் தெளிவான ஒரு முடிவு செய்து இருக்காங்க. மீண்டும் இந்த தவறை செய்யக்கூடாது. திராவிட முன்னேற்ற கழகத்தை தான் வெற்றி பெற வைக்கனும் என்ற முடிவுடன் இருக்காங்க என்றார். தொடர்ந்து அவர் விசிக தலைவர் திருமாவளவனின் கருத்து குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி. அதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்டும் என்று பேசியுள்ளது தொடர்பாக கேட்கப்பட்டது.
அதற்கு கூட்டணி பேர்ல வேண்டுமானால் வெற்றி இருக்கலாம். ஆனால் அக்டோபர் 9 ஆம் தேதி வெற்றி திராவிடர் முன்னேற்ற கழகம் என்பதை அண்ணன் திருமாவளவன் அவர்களே தெரிந்து கொள்வார்கள் என பதில் அளித்தார். அதோடு அவரிடம் திமுகவினரை மு.க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்த கருத்து தொடர்பாகவும் பேசிய அவர், யார் தவறு செய்தாலும் கண்டிக்க கூடியவர் தான் எங்களுடைய தலைவர்.
ஒரு தொண்டன் தவறு செய்தாலும் கண்டிக்க கூடியவர். எனவே அந்த அரசியல் மாண்பை நிச்சயமாக கடை பிடிப்போம். அண்ணன் திருமாவளவன் அறிவுரையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதோடு இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதெல்லாம் கிடையாது. திமுக தேர்தல் வரலாற்றில் அன்றைக்கு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதோ, அதே போல் தற்போது இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும் என திட்டவட்டமாக தெரிவித்தார் பரந்தாமன்.
இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு ஆதரவு அளித்து விட்டு, இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவுங்க தான் என்ன நிலைப்பாடு எடுக்குறாங்க என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்றார். இதற்கிடையில் இன்றைய தினம் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.
