பெண்களின் கௌரவத்தை எதிர்க்கட்சிகள் காயப்படுத்தியுள்ளன; இந்த ஆறாத வடு மற்றும் அவமானத்தை இந்தியப் பெண்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் மீது நேரடித் தாக்குதல்
பிரதமர் மோடி தனது உரையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெண்களின் அதிகாரமளித்தலுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தடைபட்டபோது, எதிர்க்கட்சியினர் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இது வெறும் அரசியல் எதிர்ப்பு அல்ல; இது நாட்டின் ஒட்டுமொத்தப் பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதை மீதான தாக்குதல்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பெண்களை அவமதிக்கும் இந்தச் செயலை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், இதற்கான தண்டனையைத் தேர்தலில் மக்கள் வழங்குவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview
மகளிர் சக்தியின் முக்கியத்துவம்
பாரதத்தின் வளர்ச்சிக்கு பெண் சக்தி மிக முக்கிய தூண் என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். “பெண்கள் முன்னேறும்போதுதான் சமூகம் முன்னேறும். எங்களின் ஒவ்வொரு திட்டமும்—அது வீடுகள் வழங்கும் திட்டமாக இருந்தாலும் சரி, பொருளாதாரச் சுதந்திரம் அளிக்கும் திட்டமாக இருந்தாலும் சரி—பெண்களை மையப்படுத்தியே உள்ளன” என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தாய்மார்களிடம் மன்னிப்பு
மசோதா நிறைவேறாததற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பேசிய பிரதமர், நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்புக் கோரினார். “உங்கள் கனவுகள் நசுக்கப்படுவதைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். ஆனால், உங்களின் உரிமைகளைப் பெற்றுத் தரும் வரை நான் ஓயமாட்டேன். பாஜக அரசு எப்போதும் பெண்களின் பக்கம் நிற்கும்” என்று அவர் உறுதி அளித்தார்.
இந்த உரை, வரும் தேர்தலில் பெண்களின் வாக்குகள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்த அரசியல் விவாதத்தைச் சூடாக்கியுள்ளது. பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதே இந்தியாவின் ஜனநாயகத்திற்கு உண்மையான பலம் என்று பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
முக்கியப் பிரச்சனை என்ன?
- மசோதா தோல்வி: 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில் மக்களவை இடங்களை 543-லிருந்து 816-ஆக அதிகரிக்க அரசு முயன்றது. ஆனால், இதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3rd) பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது.
- எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு: காங்கிரஸ், திமுக (DMK), திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் சமாஜ்வாதி (SP) போன்ற கட்சிகள் இந்தத் திருத்தங்களுக்கு எதிராக வாக்களித்தன. இந்த மசோதாவைத் தொகுதி மறுவரையறையுடன் (Delimitation) இணைப்பதையே அவர்கள் பிரதானமாக எதிர்த்தனர்.
- கண்ணியம் மீதான தாக்குதல்: மசோதா தோற்கடிக்கப்பட்டபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மேஜையைத் தட்டி (Desk-thumping) ஆரவாரம் செய்தனர். இந்தச் செயலைத்தான் பிரதமர் “பெண்களின் கௌரவத்தைச் சிதைக்கும் செயல்” என்றும், இது ஒரு “பெண் சிசுக்கொலை” (Bhroon Hatya) போன்றது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
- மறக்க முடியாத அவமானம்: “பெண்கள் எதை வேண்டுமானாலும் மறக்கலாம், ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்” என்று அவர் எச்சரித்தார்.
மோடியின் உறுதிமொழி
இந்தச் பின்னடைவு தற்காலிகமானது என்றும், வரும் 2029 பொதுத் தேர்தலுக்குள் அனைத்துத் தடைகளையும் நீக்கி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
