நமது நிருபர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில், 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் நீலக்குறிஞ்சி மலர்கள் மலர்ந்துள்ளன. இதை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிஞ்சி மலர்களில் பல வகை உண்டு. நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. அவை உயரம், 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் செடிகள் முதல், 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மலர்ச் செடிகள் வரை ஏராளமான வகைகள் குறிஞ்சியில் உண்டு.
அதில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள் தனித்துவமாக கருதப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் வனப்பகுதியில் 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிச்சி மலர் செடிகள் உள்ளன. ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செடிகள், இப்போது பூத்துள்ளன. இந்த அதிசய மலர் மலர்ந்துள்ளதை, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
