மேகதாது விவகாரம், மத்திய இணையமைச்சருக்கு இ.பி.எஸ். கண்டனம்

மேகதாது அணை விவகாரத்தில், மத்திய இணையமைச்சருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

அதிர்ச்சி தரும் பதில் இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது;காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில், 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் கர்நாடக அரசு கட்டுவதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகளிடம் ஒப்புதல் பெற வேண்டும்,” என்று எந்த இடத்திலும் கூறவில்லை என மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதில், தமிழக மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு காவிரி நதிநீர், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, எனது தலைமையிலான அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 2018, பிப்ரவரி 16ஆம் தேதி அன்று காவிரி நதிநீர் தொடர்பான போற்றத்தக்க இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

குடிநீருக்கே பாதிப்பு அதிமுக எம்பிக்களின் தொடர் அழுத்தம் காரணமாக, மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை, 2018 ஜூன் ஒன்றாம் தேதி, மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதன்படி தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீர் பெறப்பட்டு வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய காலத்தில் வழங்கத் தவறியதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பல மாவட்டங்களில் குடிநீருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லாமல்…பன் மாநில நதிகள் தேசிய சொத்து, எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர இயலாது என்று 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களின் வாதங்களை முழுமையாக கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், தனது தீர்ப்பில், பக்க எண்.342ல், ’ஆற்றின் மேல்புறத்தில் அமைந்துள்ள எந்த ஒரு மாநிலமும், ஆற்றின் கீழ்ப்புறத்தில் உள்ள மாநிலங்களுக்கு திட்டமிட்டபடி, நீர் விநியோகம் செய்யப்படுவதை பாதிக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது’ எனத் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சரின் பதில், காவிரி நதி பாயும் சம்பந்தப்பட்ட மாநில மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

உணர்வுகளை மனதில் கொண்டு… காவிரி நதி தமிழகத்தின் ஜீவ நதி. பல ஆண்டுகளாக சட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகு, உச்சநீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. இந்த சூழ்நிலையில், மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் அளித்த பதில், தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இதுபோன்ற மிக முக்கியமான பிரச்சனை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளை மனதில் கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Source link