மேயர் பிரியா பட்ஜெட் ஒதுக்கிய தொகை ரூ 60 லட்சம்; த.வெ.க ஆட்சி வந்த பிறகு செலவான தொகை ரூ 22 லட்சம்: பள்ளிகளுக்கு பிரிண்டர் சப்ளையில் இவ்வளவு மிச்சமா?

சென்னை மாநகராட்சியின் 2026 – 27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 திட்டங்களுக்கான செலவு மதிப்பீடுகள் உயர்த்திக் காட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவற்றின் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய தமிழக வெற்றிக் கழகம் அரசு உத்தரவிட்டதாக கூறப்பட்டது.  மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரிண்டர்கள்  வாங்குவது தொடர்பான ஒரு திட்டத்தின் செலவினங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இன்டர்நெட் ஸ்பீட்ல இவங்க தான் நம்பர் 1… ஆனா யோசிக்காம ஃபோன தூக்கி போட்டாங்க; இந்தியா நோட் பண்ணுங்கப்பா

மாநகராட்சியின் 100 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வாங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ. 60 லட்சம் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, த.வெ.க அரசு அனைத்து 100 பள்ளிகளுக்கும் ரூ. 22.12 லட்சத்தில் பிரிண்டர்களை வாங்கி வழங்கி, ரூ. 37.78 லட்சத்தை சேமித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல திட்டங்களின் மதிப்பிடப்பட்ட செலவுகளும் தேவைக்கு அதிகமாக இருப்பது போல் தெரியவந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதன் விளைவாக, மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பாக, சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து 90 திட்டங்களின் செலவு மதிப்பீடுகளையும் விரிவாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு த.வெ.க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

பொது நிதி சரியாக ஒதுக்கப்பட்டுள்ளதா மற்றும் முன்மொழியப்பட்ட செலவினங்கள் தற்போதைய சந்தை விலைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை இந்த ஆய்வு மதிப்பீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய நிர்வாகத்தின் பட்ஜெட் தாக்கலின் போது இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், இந்த முடிவு சென்னை மேயர் பிரியாவுக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஆய்வு முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் பற்றாக்குறை பட்ஜெட்டாகத் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா 90 புதிய வளர்ச்சித் திட்டங்களை அறிவித்திருந்தார். அதில் மொத்த வருவாய் ரூ. 7,717 கோடி என்றும், செலவு ரூ. 9,319 கோடி என்றும் கணக்கிடப்பட்டு, நிதிப் பற்றாக்குறை ரூ. 1,602 கோடியாக இருந்தது. உலக வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் ரூ. 2,000 கோடி கடன்களுக்கு மாநகராட்சி ஆண்டுதோறும் ரூ. 95.20 கோடியை வட்டியாகச் செலுத்தி வருவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில், மாநகராட்சி பள்ளிகளைச் சுற்றி 50 கி.மீ தூரத்திற்குப் பாதுகாப்பான வழித்தடங்களை உருவாக்க ரூ. 200 கோடி, 30 நீர்நிலைகளைச் சீரமைக்க ரூ. 100 கோடி, 60 பூங்காக்களை அறிவியல் ரீதியாகப் புதுப்பிக்க ரூ. 60 கோடி மற்றும் நீர்நிலைகளின் ஓரங்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் கட்ட ரூ. 55 கோடி ஆகியவை அடங்கும்.

நகரம் முழுவதும் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்திருந்த நிலையில், மேலும் பல நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பொது நலத் திட்டங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Source link