எழுதியவர்: லால்மணி வர்மா
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க, முதன்மை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி) மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்து முக்கிய போட்டியாளர்களும் பட்டியல் சாதியினரை (எஸ்சி) அணுகும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் தலித்துகள் மத்தியிலான தங்களுடைய ஆதரவுத் தளங்களை ஒருங்கிணைக்கவும் விரிவாக்கவும் மாயாவதி தலைமையிலான பி.எஸ்.பி மற்றும் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) அல்லது ஏஎஸ்.பி (கே.ஆர்) ஆகியவை ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டு வருகின்றன.
மே மாதம் மீரட்டில் தலித் கல்லூரி மாணவி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் அரசியல் புயல் கிளம்பியுள்ளது. இது ஜூலை 8 அன்று வன்முறையாக மாறிய போராட்டங்களைத் தூண்டியது. போராட்டக்காரர்கள் மீது காவல் துறை நடத்திய அடக்குமுறையும், அவர்களைத் தாக்கியதாக மீரட் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்.எஸ்.பி) அவினாஷ் பாண்டே மீது நடவடிக்கை கோரப்பட்டதும் இந்த கொந்தளிப்பை மேலும் அதிகரித்துள்ளது.
உத்தரப் பிரதேச மக்கள் தொகையில் தலித்துகள் 21% உள்ளனர். மாநிலத்தின் 403 தொகுதிகளில் 84 தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 2022 தேர்தலில், பா.ஜ.கவும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளமும் (சோனேலால்) இணைந்து 63 எஸ்சி தொகுதிகளைக் கைப்பற்றின, அன்றைய எஸ்.பி தலைமையிலான கூட்டணி 20 இடங்களை வென்றது. தலித்துகள் முக்கியமாக மேற்கு உத்தரப் பிரதேசம், புந்தேல்கண்ட் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் பெருமளவில் செல்வாக்கு செலுத்துபவர்களாக உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி
மீரட் தலித் பெண் கொல்லப்பட்டு வாரங்களுக்குப் பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜூலை 18 அன்று காசியாபாத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அப்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்தார். துயருற்ற குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர், “இந்தக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட எந்தவொரு நபரும் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிக்க முடியாது, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான சட்ட நடவடிக்கை உறுதி செய்யப்படும்” என்றார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி மற்றும் வீடும் வழங்குவதாக ஆதித்யநாத் அறிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, உத்தரப் பிரதேச சமூக நலன் மற்றும் எஸ்சி/எஸ்டி நலத்துறை அமைச்சரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அசிம் அருண், மீரட்டில் கொல்லப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து வழக்கின் விசாரணையை ஆய்வு செய்தார்.
ஏப்ரல் மாதத்தில், தலித்துகளை உள்ளடக்கிய தனது சமூகக் கூட்டணியை மீண்டும் கட்டமைக்க முயன்ற ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு, அனைத்து 403 தொகுதிகளிலும் உள்ள அம்பேத்கர் சிலைகளை அழகுபடுத்தவும், மேம்படுத்தவும், பராமரிக்கவும் முனையும் ரூ.403 கோடி மதிப்பிலான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மூர்த்தி விகாஸ் யோஜனா என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியது.
உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள அம்பேத்கர் மற்றும் பிற சமூக நீதித் தலைவர்களின் சிலைகளுக்கு மேல் குறியீட்டு முறையிலான “பாதுகாப்புக் குடைகள்” நிறுவப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தின் 80 தொகுதிகளில், 2019 தேர்தலில் 62 இடங்களை வென்றிருந்த பா.ஜ.கவின் எண்ணிக்கை 33 ஆகக் குறைந்தது, அதேவேளையில் எஸ்.பி-காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. ஒதுக்கப்பட்ட 17 எஸ்சி தொகுதிகளில், எஸ்.பி ஏழு தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வென்றன, அதே வேளையில் பா.ஜ.க எட்டு இடங்களைப் பெற்றது. 2019-ல் பி.எஸ்.பி வென்ற மீதமுள்ள ஒரு தனித்தொகுதியான நாகினாவை சந்திரசேகர் ஆசாத் கைப்பற்றினார்.
சமாஜ்வாதி கட்சி
அகிலேஷ் யாதவ் தலைமையிலான எஸ்.பி, மீரட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று “சம்விதான் பச்சாவ், லோக்தாந்திர பச்சாவ் மகா பேரணி” மற்றும் அம்பேத்கரின் பாரம்பரியம் குறித்த கலந்துரையாடலை நடத்தியது. வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அக்கட்சி முன்மொழிந்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதல்முறையாக அகிலேஷ், பி.எஸ்.பி நிறுவனர் காஞ்சிராமின் பிறந்தநாளான மார்ச் 15-ஐ மாநிலம் முழுவதும் பெரிய அளவில் கொண்டாட முடிவு செய்தார், அதற்கு “பகுஜன் சமாஜ் தினம் அல்லது பிடிஏ (பிக்டா, தலித் மற்றும் அல்சங்கயாக்) தினம்” என்று பெயரிட்டார்.
“காஞ்சிராம் டிசம்பர் 1992-ல் சிறந்த சோசலிசத் தலைவர் முலாயம் சிங் யாதவுடன் கைகோர்த்து ‘பகுஜன் சமாஜ் பனாவோ அபியான்’ இயக்கத்திற்கு வேகத்தைக் கூட்டினார். டிசம்பர் 1993-ல் நேதாஜி (முலாயம்) தலைமையில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் அரசை அமைக்க அவர் உதவினார்” என்று எஸ்.பி கூறியது.
எஸ்.பி வட்டாரங்கள் கூறுகையில், 2027 தேர்தலில் தனது பிடிஏ திட்டத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, எஸ்சி தொகுதிகளைத் தவிர்த்து, குறைந்தது 14 பொதுத் தொகுதிகளிலாவது தலித் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி திட்டமிட்டு வருகிறது.
பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி)
2022 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல் இரண்டிலும் பின்னடைவைச் சந்தித்த பி.எஸ்.பியை மீண்டும் உயிர்ப்பிக்கப் போராடி வரும் கட்சியின் சுப்ரீமோவும் முன்னாள் முதல்வருமான மாயாவதி, முஸ்லிம்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருடன் (OBC) தலித்துகளின் சமூகக் கூட்டணியை உருவாக்க கடந்த ஆண்டு “பாய்சாரா கமிட்டிகளை” மீண்டும் புதுப்பித்தார்.
பி.எஸ்.பி, முஸ்லிம் மற்றும் தலித் பிரிவுகளில் இருந்து தலா ஒரு ஒருங்கிணைப்பாளருடன் ‘முஸ்லிம் சமாஜ் பாய்சாரா சங்கதன்’ அமைப்பை உருவாக்கியது. அதேபோல், ஓபிசி பாய்சாரா கமிட்டியில் ஓபிசி மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த தலா ஒரு ஒருங்கிணைப்பாளர்கள் சேர்க்கப்பட்டனர். கட்சி இந்த அமைப்புகளின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்து வருகிறது.
இருப்பினும், மீரட் தலித் பெண் கொலை மீதான போராட்டங்கள் குறித்த மாயாவதியின் நிலைப்பாடு, உத்தரப் பிரதேசத்திலும் பிற அதை ஒட்டியப் பகுதிகளிலும் ஒரு முக்கிய தலித் முகமாக உருவெடுக்க முயலும் ஆசாத்திடமிருந்து விமர்சனத்தைப் பெற்றது.
மீரட் போராட்டங்கள் குறித்த தனது எதிர்வினையில், மாயாவதி தலித்துகள் மற்றும் பிற விளிம்புநிலை பிரிவினர் அரசியலமைப்பு வழிகள் மூலம் அநீதியை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் தெருக்களில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், வாக்குச் சீட்டு மூலம் பெறும் அரசியல் அதிகாரமே அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான திறவுகோலாக இருக்கும் என்றும் அவர் வாதிட்டார். “குறிப்பிட்ட சில அமைப்புகளும் அரசியல் கட்சிகளும், குறுகிய அரசியல் நலன்களுக்காக, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களைப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டி வழிதவறச் செய்கின்றன” என்று அவர் கூறினார், இது வெளிப்படையாக ஏஎஸ்.பி (கேஆர்) மீதான மறைமுகத் தாக்குதலாகும்.
ஆசாத் சமாஜ் கட்சி – கன்சிசிராம் (ஏ.எஸ்.பி – கே.ஆர்)
மீரட் போராட்டங்கள் குறித்து மாயாவதியின் கருத்துக்களுக்கு ஆசாத்திடமிருந்து கடுமையான பதிலடி வந்தது. அவர் மீரட்டுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தலித் பெண்ணின் தாய் மற்றும் சகோதரியைச் சந்தித்து, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்புவதாக உறுதியளித்தார். மாயாவதி மீது மறைமுகத் தாக்குதல் தொடுத்த அவர், வெறும் அறிக்கைகளை மட்டும் வெளியிடுவது “போதாது” என்றும், அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் கூறினார்.
ஜூன் மாதத் தொடக்கத்தில், 2027 தேர்தலுக்கு முன்னதாக தலித் வாக்காளர்களைக் கவர ஆசாத் தனது “சத்தா பரிவர்த்தன் யாத்திரை”யை உத்தரப் பிரதேசத்தில் தொடங்கினார். தேர்தலுக்கான தனது கட்சியின் சாத்தியமான வேட்பாளர்களை ஆய்வு செய்யவும் அவர் தொடங்கினார்.
“தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் ஓபிசியினருக்கு எதிராக எந்தவொரு குற்றச் சம்பவமும் நடக்கும்போதெல்லாம், எங்கள் தலைவர் (ஆசாத்) பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க அங்கு செல்கிறார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் மீரட், லக்னோ மற்றும் ரேபரேலியில் இருந்தார்” என்று ஏஎஸ்.பி (கேஆர்) மாநிலத் துணைத் தலைவர் சௌரப் கிஷோர் கூறினார். மேலும், கட்சியின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஜூலை 21 அன்று வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் சேர்த்துக் கூறினார்.
காங்கிரஸ்
எஸ்.பியின் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸும் தலித்-ஓபிசி கூட்டணியில் தனது கவனத்தைப் புதுப்பித்துள்ளதைக் காட்டும் வகையில், உ.பி. மாநில அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) பொறுப்பாளராக இருந்த அவினாஷ் பாண்டேவுக்குப் பதிலாக ராஜேந்திர பால் கௌதமை சமீபத்தில் நியமித்தது. ஒரு முக்கிய தலித் தலைவரான கௌதம், ஏஐசிசியின் எஸ்சி பிரிவின் தலைவராகவும் உள்ளார்.
காஞ்சிராமின் பிறந்தநாளை “சமாஜிக் பரிவர்த்தன் திவாஸ்” ஆகக் கொண்டாடுவதன் மூலம் பழம்பெரும் கட்சியான காங்கிரஸும் அவரது பாரம்பரியத்திற்கு உரிமை கோரியது. லக்னோவில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜவஹர்லால் நேரு உயிருடன் இருந்திருந்தால் காஞ்சிராமை காங்கிரஸின் முதல்வராக்கியிருப்பார் என்று கூறினார்.
ஜூலை 20 அன்று, காங்கிரஸ் கட்சி உ.பி. முழுவதும் ஆகஸ்ட் 20 வரை நடைபயணங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்காக “பகுஜன் விசார்” என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது, இது ஓபிசி, தலித் மற்றும் பிற விளிம்புநிலைக் குழுக்களை திரட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
லோக் ஜனசக்தி கட்சி – ராம் விலாஸ் [எல்.ஜே.பி (ஆர்.வி)]
கடந்த வாரம், பீகாரில் பா.ஜ.க தலைமையிலான என்டிஏவின் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான எல்.ஜே.பி (ராம் விலாஸ்), தனது உத்தரப் பிரதேச மாநிலச் செயற்குழு கூட்டத்தை லக்னோவில் நடத்தியது, இதில் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கலந்துகொண்டார். பாசி (தலித்) சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் – “ஏன் கடன் கேட்க வேண்டும், நம் சொந்தத் தலைவரே தயாராக இருக்கும்போது (Kyun maange udhaar, jab apna neta taiyyar)” என்ற முழக்கத்தைப் பரிந்துரைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர், சிராக் தனது கட்சி தேர்தலில் போட்டியிட 403 தொகுதிகளிலும் தயாராகி வருவதாகக் கூறியதாகத் தெரிகிறது.
எல்.ஜே.பி (ஆர்.வி) எம்பி அருண் பாரதியும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் தீரேந்திர குமார் சின்ஹாவும் கடந்த ஒரு ஆண்டாக உ.பி முழுவதும் பயணம் செய்து, பல்வேறு அநீதிகளால் பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களைச் சந்தித்து வருகின்றனர்.
“உத்தரப் பிரதேசத்தில் பாசி சமூகம் ஆதரவற்றதாக உணர்கிறது. தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படும்போதெல்லாம் எல்.ஜே.பி (ஆர்.வி) அவர்களுக்கு ஆதரவையும் நிதியுதவியையும் வழங்கி வருகிறது. இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில், எஸ்.பி தலைவர்களே குற்றம் சாட்டப்படுகிறார்கள். நாங்கள் இந்த விவகாரங்களை முதல்வரிடமும் கொண்டு செல்கிறோம்” என்று கூறிய சின்ஹா, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் கிராம அளவில் கட்சி “தலித் சௌபால்களை” (தலித் கலந்துரையாடல்கள்) அமைக்கும் என்றும் சேர்த்துக் கூறினார்.
பாரதியும் சின்ஹாவும் ஜூலை 24 அன்று அயோத்தியில் நடைபெறும் அத்தகைய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். “பாசிகள் மற்றும் பாஸ்வான்களின் எங்கள் முக்கிய வாக்குத் தளத்தை நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம்” என்று கூறிய சின்ஹா, உ.பி-யில் என்டிஏ கூட்டணியில் பாசி சமூகத்தின் பிரதிநிதிகள் எவரும் இல்லை என்று உரிமை கோரினார்.
2024 தேர்தலில் எஸ்.பி-காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்த பாசிகள் மற்றும் பாஸ்வான்கள் குறிப்பிடத்தக்க காரணியாகக் கருதப்படும் 104 தொகுதிகளை எல்.ஜே.பி (ஆர்.வி) அடையாளம் கண்டுள்ளது.
