வண்டல் மண்ணில் புதையும் கோவையின் குடிநீர் ஆதாரங்கள்! பில்லுார், சிறுவாணி துார்வார 'சிறுதுளி' வலியுறுத்தல்

கோவை: பில்லுார், சிறுவாணி அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி வருங்கால சந்ததியினருக்கு நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என, கோவை ‘சிறுதுளி’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கோவையின் குடிநீர் விநியோகத்திற்கான உயிர்நாடியாக, பில்லுார் மற்றும் சிறுவாணி அணைகள் திகழ்கின்றன.

நகரம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்குத் தூய்மையான நீரை வழங்குகின்றன. நகரின் எதிர்கால நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இந்த முக்கியமான நீர் ஆதாரங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது அவசியம்.

இருப்பினும், காலப்போக்கில் இரு நீர்த்தேக்கங்களிலும் பெருமளவில் வண்டல் மண் படிந்ததால், அவற்றின் பயனுள்ள நீர்த்தேக்கக் கொள்ளளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, நீரேற்றும் திறன் குறைந்துள்ளதோடு, விநியோகத்திற்குக் கிடைக்கும் நீரின் அளவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணைகளை துார் வார வேண்டும் என, அரசுக்கு சிறுதுளி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

‘சிறுதுளி’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை நகரம் விரைவான நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை, தொழில்துறைகள், கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனால், குடிநீருக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து, நகரின் தற்போதைய நீர் விநியோகக் கட்டமைப்பின் மீது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

நீர் தேவை அதிகரிப்பதும், அதே வேளையில் வண்டல் படிவுகளால் நீர்த்தேக்கங்களின் சேமிப்புத் திறன் குறைவதும், நிலையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதில் ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பில்லுார் மற்றும் சிறுவாணி அணைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றுவதால், அவற்றின் நீர் சேமிப்புத் திறன் மீட்டெடுக்கப்படும். நிலத்தடி நீர் செறிவூட்டலை அதிகரித்து, குடிநீர் இருப்பை கணிசமாக உயர்த்தும். அணைகள் துார் வாரப்படுவதால், நீர் சேமிப்புத் திறனை கணிசமாக அதிகரிப்பதோடு, கோவையின் குடிநீர் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.

விரிவடைந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு, நீர் தேவைகளை வரும் ஆண்டுகளில் பூர்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை உதவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சேமிப்பு திறன் அதிகரிக்கப்படுமா!

அணைகளின் செயல்பாட்டுத் திறனில் வண்டல் படிவு ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில், அவற்றின் தண்ணீர் எடுக்கும் திறன் மற்றும் தற்போதைய நீர் இறைக்கும் அளவு குறித்த ஒப்பீட்டு அறிக்கை:

Source link