விநாயகப் பெருமானின் சிறப்புகள்

இந்துக்கள் எந்தவொரு சுப காரியத்தையும், வழிபாட்டையும் தொடங்குவதற்கு முன்பு விநாயகப்பெருமானை வணங்குவது மரபாக உள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் முறைக்கு ‘காணாபத்யம்’ என்று பெயர். இதனை ஒரு பிரிவாக ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர்.

  • விநாயகர் யானையின் முகத்தைக் கொண்டவர் என்பதால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். பூதகணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றழைக்கப்படுகின்றார். யானை முகத்தை (கஜம்) உடையவர் என்பதால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார். விக்கினங்களைத் தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் என்பதால் விக்னேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.

  • விநாயகப் பெருமானுக்கு தும்பிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. இதனால் அவர் ஐங்கரன் என்ற பெயர் பெற்றார். தும்பிக்கையில் தண்ணீர் குடம் தாங்கியும், பின் இரண்டு கரங்களில் அங்குசம், பாசம் ஏந்தியும், முன் வலது கரத்தில் தந்தம், முன் இடது கரத்தில் மோதகமும் வைத்திருப்பார்.

  • விநாயகருக்கு மூஷிகம் (எலி) வாகனத்தைத் தவிர, மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் ஆகியவையும் வாகனங்களாக உள்ளன.

  • வெள்ளிக்கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் கொண்டு பூஜிப்பதுடன், கணபதி ஹோமம் செய்து வந்தால் நீண்ட செல்வம் வந்து சேரும்.

  • பஞ்சபூதத்தோடு தொடர்புடையவராக விநாயகர் இருக்கிறார். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவமாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆலய மரத்தடியில் மண் வடிவமாகவும், வன்னி மரத்தடியில் நெருப்பு வடிவமாகவும் விளங்குகிறார்.

  • விநாயகப் பெருமான், பிரணவ மந்திரமான ஓம்காரத்தின் உருவமாகத் திகழ்கிறார். விநாயகரின் நாபியில் (தொப்புள்) பிரம்மதேவர், முகத்தில் விஷ்ணு, கண்ணில் சிவபெருமான், இடப்பாகத்தில் சக்தி, வலப்பாகத்தில் சூரியன் வாசம் செய்கிறார்கள்.

  • ‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘இவரை விட மேலானவர் இல்லை’ என்று பொருள். வைணவக் கோவில்களில் வீற்றிருக்கும் விநாயகர், ‘தும்பிக்கையாழ்வார்’ என்று அழைக்கப்படுகிறார். விநாயகருக்கும், சனி பகவானுக்கும் பிரியமானது, வன்னி மரம். இந்த மரத்தின் இலைகளால் விநாயகரை பூஜித்து வழிபட்டால் சனி பகவான் தோஷம் நெருங்காது என்பது நம்பிக்கை. விநாயகருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும் விட தேங்காய் எண்ணய் காப்புதான் பிரியமானது.

  • விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை வீட்டில் அல்லது பொது இடத்தில் பிரதிஷ்டை செய்து 1, 3, 5, 7 அல்லது 11 நாட்கள் பூஜித்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. இந்த நாட்களில் தினந்தோறும் பூஜைகளை முறையாக செய்வதுடன் நைவேத்யங்களும் சமர்ப்பிக்கிறார்கள்.

Source link