தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் அளித்த பதிலுரை இன்று நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தைத் தொடர்ந்து முதல்வர் விஜயின் பதிலுரை தொடங்கியது.
சட்டம் ஒழுங்கு குறித்து விஜய் பேசியது என்ன?
தனது பதிலுரையில் தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கடந்த 100 நாட்களில் மட்டும் ஏற்பட்டது அல்ல என முதல்வர் விஜய் குறிப்பிட்டார். மேலும்,போதைப்பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து திமுகவை விமர்சித்து பேசிய முதல்வர் விஜய், 1970களில் நடைபெற்றதாகக் குறிப்பிடப்படும் ஊழல் விவகாரம் மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து பேசினார். முன்னாள் முதல்வர் கலைஞர் தனது முதல்வர் பதவியை பயன்படுத்தி அந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஸ்டாலினை விமர்சித்த விஜய்.. சைகையால் சர்ச்சை
கலைஞரைத் தொடர்ந்து ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய், “மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும்” எனக் குறிப்பிடும்போது தனது முகத்தில் கையை வைத்து ஒரு சைகை செய்தார்.
முதல்வர் விஜயின் இந்த சைகை, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை உருவகேலி செய்யும் வகையில் அமைந்ததா என்ற விவாதம் தற்போது இணையத்தில் எழுந்துள்ளது. விஜய் தனது உரைகளை முன்கூட்டியே தயாரித்து பேசுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த சைகையும் திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வலுக்கும் விமர்சனம்
இதுதொடர்பாக எழுத்தாளர் கவின்மலர் தனது சமூக வலைதளப் பதிவில் விமர்சனம் தெரிவித்துள்ளார். “மிசாவில் என்ன நடந்ததென்று தெரியுமெனச் சொலும்போது இப்படி ஒரு சைகையைச் செய்வது எல்லாம் முதலமைச்சருக்கு அழகல்ல.சிறைக்குள் காவல்துறை சித்தரவதைகளால்தான் அப்படி ஆனது என்பது உலகத்திற்கே தெரியும். இந்த உடல்மொழி காவல்துறையின் சித்தரவதைகளுக்கு அங்கீகாரம்தரும் ஒரு கேவலமான உடல்மொழி. இவரெல்லாம் காவல்துறைக்கு தலைமை தாங்கினால் அந்தக் காவல்துறை என்ன லட்சணத்தில் இருக்குமோ அந்த லட்சணத்தில் இருக்கிறது. மிசாவில் அடி உதைபட்டவர்களை கேலி செய்யும் ஒருவர் வரலாற்றறிவு இல்லாதவர். தாழ்வு மனப்பான்மையும் வன்மமும் காழ்ப்பும் கொண்ட மனதாலேயே இப்படியான சைகைகளை செய்ய முடியும். ”
விஜய்யின் சைகை குறித்து மாறுபட்ட கருத்துகள்
அதேநேரத்தில், சில அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள், முதல்வர் விஜய்ஸ்டாலினை உருவகேலி செய்யும் நோக்கில் அத்தகைய சைகையை செய்யக்கூடியவர் அல்ல என தெரிவித்து வருகின்றனர். அவர் தன்னிச்சையாக பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு இயல்பாக அந்த சைகையை செய்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் செய்த அந்த சைகை தற்போது அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
Source link
