151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் இழப்பு: தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம், மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 151 உயர்சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்பு இடங்களைக் கைவிட்ட தமிழக அரசின் நடவடிக்கைக்கு மருத்துவர்கள் சங்கம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி மற்றும் பிரசாந்த் சென் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகவில்லை என்று மருத்துவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

வழக்கு விசாரணையின் போது மாநில அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், நீதிபதி அதுகுறித்துக் கேள்வி எழுப்பியதோடு, தமிழக அரசின் வழக்கறிஞர்களைத் தேடும் சூழலும் உருவானது. மேலும், இந்த 151 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சரண்டர் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், அரசுத் தரப்பில் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறு 151 மருத்துவ இடங்களை இழக்க நேரிட்டது முற்றிலும் மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்று மருத்துவர் சங்கம் சாடியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டிற்குரிய 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அரசு அலட்சியமாகப் பறக்கவிட்டுள்ளதாக விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின், இச்சம்பவம் தொடர்பாகப் பொதுமக்களுக்கும் அரசு மருத்துவர்களுக்கும் தமிழக அரசு தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:    

” ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க போராடிப் பெற்றுத் தந்தது. https://x.com/pwilsondmk/status/2082283128262180919

ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்

தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் ‘சரண்டர்’ ஆனதன் பின்னணி என்ன?

அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா? தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்? 29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது? 

இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது. த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார். 

Source link