200% வரை உயரும் வரி: இந்திய மருந்து துறைக்கு டிரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், பதவி ஏற்றது முதலே உலக நாடுகளுக்கு வரி உயர்த்துவதில் குறிக்கோளாக இருந்து வந்தார். குறிப்பாக அமெரிக்காவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கவில்லை என்றால், இறக்குமதி வரியை உயர்த்துவேன் என வெளிப்படையாகவே ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

எதற்கும் அடிபணியாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. ஒரு கட்டத்தில் இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 100%-க்கும் மேல் உயர்த்தியதால், இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் இதிலிருந்து இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு வரிவிதிப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா, அமெரிக்காவிடம் கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வரியைக் குறைத்தது அமெரிக்கா.

இந்நிலையில் மருந்து பொருட்களுக்கான வரி விதிப்பில் புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அதிபர் டிரம்ப். இதன்படி வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு ஜெனரிக் மருந்துகளுக்கு இறக்குமதி வரி 0% என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2028-ல் 100% வரியும், 2029-ல் 200% வரியும் வசூலிக்கப்படும் என அதிர்ச்சியை அளித்துள்ளார் டிரம்ப்.

இந்த வரி விதிப்பு காரணமாக அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மருந்து நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் ஜெனரிக் மருந்துகளில் 40% மருந்துகள் இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகின்றன. இதனால் இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடியைக் கொடுத்துள்ளார் அதிபர் டிரம்ப்.

Source link