இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தாங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணம் வேகமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். பங்கு சார்ந்த முதலீடு கள் (equity) முதல் கடன் சார்ந்த நிதிகள் (debt funds) வரை சந்தையில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. உங்கள் இடர் ஏற்கும் திறனுக்கு ஏற்ப அவற்றில் நீங்கள் முதலீடு செய்யலாம். இருப்பினும், உங்கள் பணம் முழுவதையும் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானமாக இருக்காது. முறையான திட்டமிடலுடன் செயல்படும்போதுதான் முதலீட்டின் உண்மையான பலன்கள் கிடைக்கும். சில முதலீட்டு விதிகளைப் பின்பற்றினால் அவை நல்ல வருவாயை ஈட்டித் தருவதோடு உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். முதலீடு செய்வதற்கான அந்த ஏழு முக்கியமான விதிகளை இப்போது தெரிந்துகொள்வோம்.
முதலீட்டிற்கான 7 அடிப்படை விதிகள்!
72 விதி ( Rule of 72 ): உங்கள் முதலீடு இரட்டிப்பாக எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிய இந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதத்தால் 72-ஐ வகுக்க வேண்டும். உதாரணமாக, ஆண்டுக்கு 12 சதவீத வருவாய் கிடைப்பதாகக் கொண்டால், 72-ஐ 12-ஆல் வகுக்கும்போது கிடைக்கும் எண் 6. அதாவது உங்கள் பணம் ஏறக்குறைய 6 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க எவ்வளவு வருவாய் விகிதம் தேவை என்பதையும் இது உணர்த்துகிறது.
114 விதி (Rule of 114): உங்கள் முதலீடு எப்போது மூன்று மடங்காகும் என்பதை அறிய இந்த விதி உதவுகிறது. உதாரணமாக, ஆண்டுக்கு 12 சதவீத வருவாய் தரும் ஒரு சொத்தில் முதலீடு செய்தால், 114-ஐ 12-ஆல் வகுப்பதன் மூலம் கிடைக்கும் எண்ணான ஒன்பதரை ஆண்டுகளில் (114/12) உங்கள் பணம் மூன்று மடங்காகும்.
144 விதி (Rule of 144): இது 72-ன் விதியைப் போன்றதுதான். ஆனால் இது உங்கள் பணம் நான்கு மடங்காக எவ்வளவு காலம் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. 12 சதவீத வருவாய் விகிதத்தில், 144-ஐ 12-ஆல் வகுத்தால் கிடைக்கும் எண் 12. எனவே சரியாக 12 ஆண்டுகளில் உங்கள் பணம் நான்கு மடங்காகும்.
50-30-20 விதி: பணத்தை விவேகமாக நிர்வகிப்பதற்கு இந்த விதி மிகவும் பிரபலமானது. உங்கள் மொத்த வருமானத்தில் 50 சதவீதத்தை அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவிட வேண்டும் என்று இது கூறுகிறது. அதன்பிறகு, 30 சதவீதத்தை உங்கள் பொழுதுபோக்குகள் அல்லது விருப்பங்களுக்காக ஒதுக்கி வைக்க வேண்டும். மீதமுள்ள 20 சதவீதத்தை எப்போதும் சேமிப்பிற்காகச் செலவிட வேண்டும்.
குறைந்தபட்ச 10% முதலீட்டு விதி: உங்கள் வருமானத்தில் குறைந்தது 10 சதவீதத்தையாவது நீண்ட கால முதலீடாகச் செய்ய வேண்டும் என்று இந்த விதி கூறுகிறது. மேலும், இந்த முதலீட்டுத் தொகையை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
100 மைனஸ் வயது விதி (100 Minus Age Rule): முதலீடு செய்யும்போது உங்கள் வயதைக் கருத்தில் கொள்வது மிக முக்கியம். பங்குகளில் (equities) எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை இந்த விதி தீர்மானிக்கிறது. முதலீட்டாளரின் வயதை 100-லிருந்து கழிக்க வேண்டும். மீதமுள்ள சதவீதத்தை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் வயது 30 என்றால், 100-லிருந்து 30-ஐக் கழித்தால் 70 கிடைக்கும். அதாவது, உங்கள் பணத்தில் 70 சதவீதத்தை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 30 சதவீதத்தை கடன் சார்ந்த நிதிகளில் (debt funds) முதலீடு செய்வது பாதுகாப்பானது. ஏனெனில், வயது ஏற ஏற ஒருவரின் இடர் ஏற்கும் திறன் (risk appetite) குறைகிறது.
அவசரகால நிதி விதி (Emergency Fund Rule): அவசர காலங்களில் கைகொடுக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட நிதியை வைத்திருப்பது முதலீட்டின் முக்கிய விதிகளில் ஒன்றாகும். அவசரகால நிதி எவ்வளவு இருக்க வேண்டும் என்பதற்கு நிலையான விதிமுறை எதுவும் இல்லையென்றாலும் அது குறைந்தது ஆறு மாதங்களுக்கான செலவுகளை ஈடுகட்டும் வகையில் இருக்க வேண்டும்.
