திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில், தோட்டத்தில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து கொடூரமாக தாக்கிப் பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது இளைஞரை, அப்பகுதி மக்கள் துரத்திப் பிடித்துக் கட்டிவைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அய்யலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி, தனது மகன்கள் வெளியூரில் வசித்து வரும் சூழலில், விவசாய தோட்டத்தில் தனியாக தங்கி ஆடு, மாடுகளைப் பராமரித்து வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், சம்பவத்தன்று நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து கதவை உள்பக்கமாக தாழிட்டுள்ளார். பின்னர், மூதாட்டியை தாக்கி, அவர் சத்தமிடாதவாறு வாயில் துணியை திணித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
விடியற்காலையில் தோட்டத்திற்கு பால் கறக்க வந்த பால்காரர், வீட்டிற்குள் இருந்து மூதாட்டியின் அவலக்குரல் கேட்டுப் பதறியடித்துக் கதவைத் தட்டியுள்ளார். ஆட்கள் வந்ததை உணர்ந்த அந்த நபர் உடனடியாக கதவைத் திறந்து தப்பியோட முயன்றார். பால்காரரின் கூச்சலை கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தப்பியோடிய அந்த இளைஞரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவரை அப்பகுதியில் கட்டிவைத்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டியை மீட்ட கிராம மக்கள், அவரை சிகிச்சைக்காக உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்து வந்த வடமதுரை போலீசார், பொதுமக்களின் பிடியிலிருந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் பாலம் பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளியான பால்சாமி (27) என்பதும், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருப்பதும் தெரியவந்தது. மூதாட்டியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் பால்சாமி மீது வழக்குப் பதிவு செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
பெருவெள்ளத்தில் உருக்குலைந்த நேபாளம்..!! ரூ.24,000 கோடி அளவுக்கு சேதம்..!! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்..!!
