9/11 தாக்குதலுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இந்தியாவின் மீதும் தாக்குதல் நடத்த அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாக மத்திய உளவுத்துறை வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பின் லேடன் தொடர்பான 70-க்கும் மேற்பட்ட அதிபர் உளவுத்துறை அறிக்கைகள் (Presidential Daily Briefs) மற்றும் 100 பக்கங்களுக்கும் அதிகமான ஆவணங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 28, 1998 அன்று வெளியிடப்பட்ட அதிபர் உளவுத்துறை அறிக்கையின்படி, எகிப்து, குவைத், சவுதி அரேபியா, யேமன், உகாண்டா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்த பின் லேடன் திட்டமிட்டிருந்தார்.
‘பின் லேடன் பயங்கரவாத வலைப்பின்னல் இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது’ (Bin Laden Terrorist Network Still A Threat) என்ற தலைப்பிலான சிஐஏ ஆவணங்களில் இந்தத் தாக்குதல் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவின் எந்தப் பகுதி குறிவைக்கப்பட்டது அல்லது இதற்கான குறிப்பிட்ட செயல்பாட்டுத் திட்டம் என்ன என்பது குறித்த விரிவான விவரங்கள் அதில் குறிப்பிடப்படவில்லை.
9/11 தாக்குதல் குறித்த முக்கியத் தகவல்கள்:
9/11 தாக்குதலின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, சிஐஏ 71 இரகசியப் பாதுகாப்பு விலக்கப்பட்ட அதிபரின் தினசரி குறிப்புகளை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 1, 1998 தேதியிட்ட ஆவணம் ஒன்றில், ஒசாமா பின் லேடனின் முகவர்கள் அமெரிக்காவிற்குள்ளேயே வசித்து வருவதை கிளிண்டன் நிர்வாகம் முன்பே அறிந்திருந்தது என்பது தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, பின் லேடனின் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமெரிக்காவில் வசித்து வருவதாக வெள்ளை மாளிகைக்கு சிஐஏ எச்சரிக்கை விடுத்திருந்தது. பின் லேடனின் நைரோபி பிரிவை வழிநடத்திய அமெரிக்க குடிமகன் ஒருவர், அப்பொழுது FBI கண்காணிப்பின் கீழ் டல்லாஸில் வசித்து வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
