'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail

இந்திய எண்ணெய் வர்த்தகத்தில் தலையிடும் அமெரிக்கா – என்ன நடக்கிறது?

மோடி - ட்ரம்ப்

2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம்.

“இனி இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காது என்று இந்தியப் பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார். உடனடியாக எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட முடியாது. ஆனால், மெல்ல மெல்ல நிறுத்தப்படும்”

இப்போது… 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம்.

“ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியா, வெனிசுலா எண்ணெய்யை வாங்க உள்ளது”

இவை இரண்டுமே அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து.

திரும்பத் திரும்ப… மீண்டும் மீண்டும்… இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ட்ரம்ப் தலையிட்டுக் கொண்டே இருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ஆகஸ்ட் மாதம்…

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன் ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் இந்தியாவின் நிலைப்பாடு – “இந்தியா மற்றும் இந்திய மக்களின் நலனுக்கு எது நல்லதோ, அதைத்தான் இந்திய அரசு செய்யும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்”

இதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என இருவருமே கூறியிருந்தார்கள்.

ஆனால், ஆகஸ்டிற்குப் பின் நிலைமையே வேறு.

கடந்த ஆகஸ்ட் மாதம், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவிகித வரி ப்ளஸ் கூடுதல் 25 சதவிகித வரியை இந்தியா மீது விதித்தது அமெரிக்கா.

கடந்த நவம்பர் மாதம் முதல், ரோஸ் நேபிட் மற்றும் லுகோயில் என்னும் இரு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய்களுக்குத் தடை விதித்தது அமெரிக்கா.

இந்தியா ரோஸ் நேபிட் நிறுவனத்திடம் இருந்துதான் அதிகம் எண்ணெய் வாங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரி… தடை… என அடுத்தடுத்த அடிகளால், இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்கியது.

மோடி, புதின்
மோடி, புதின்

ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு…

2023-24 நிதியாண்டில், ஒரு நாளுக்கு 2.2 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

2024-25 நிதியாண்டில் தோராயமாக 1.8 – 1.9 மில்லியன் பேரல்கள் ஒரு நாளுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களை ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்கள் 31 சதவிகிதம் குறைவாகவே எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

2025-ம் ஆண்டு, நவம்பர் மாதம், சற்று அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மாதம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது, கடந்த ஆறு மாதங்களை விட மிக அதிகமான இறக்குமதியாக இருந்தது.

இவ்வளவு இறக்குமதிக்குக் காரணம், தடைக்கு முன்பே, குறைந்த விலையில் எண்ணெய் இறக்குமதி செய்து வைத்துவிடலாம் என்பதுதான்.

2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், அதற்கு முந்தைய மாதத்தை விட, 29 சதவிகிதம் குறைந்த அளவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆக, அமெரிக்காவின் எச்சரிக்கைக்குப் பின், மெல்ல மெல்ல ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து வருகிறது இந்தியா.

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி

இந்தியா – ஈரான்

இப்போது ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே உறவு சரியில்லை.

இதனால், ஈரானில் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று ட்ரம்ப் கூறுகிறார்.

2022-ம் ஆண்டு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியதில் இருந்து, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக் கொண்டது இந்தியா.

இப்போது ஈரானில் இருந்து இந்தியா பெயரளவிற்கே எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது.

இதுவும் கூடாது என்கிறார் ட்ரம்ப்.

ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்துகிறது… அதற்கு இந்தியாவில் இருந்து செல்லும் பணம் உதவுகிறது என்று ட்ரம்ப் கூறுவது கூட ஒரு பேச்சுக்கு நியாயம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், இவருக்கும், ஈரானுக்கும் ஆகவில்லை என்பதால், இந்தியா அவர்களிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என்பதில் என்ன நியாயம்?

இறையாண்மை

இறக்குமதி, ஏற்றுமதி என்பதெல்லாம் ஒரு நாட்டின் தனிப்பட்ட விஷயம். அது அதன் இறையாண்மை.

இதில் வேறு எந்த நாடும் தலையிடக்கூடாது. அது மிகப்பெரிய தவறு.

அடுத்ததாக, இந்தியா என்ன முடிவெடுத்துள்ளது என்பது அமெரிக்க அதிபர் கூறுவது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கிறது.

இது குறித்து இந்திய எதிர்க்கட்சிகள் ரஷ்யா விஷயத்திலேயே கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தன.

இதை மீண்டும் ட்ரம்ப் செய்திருக்கிறார்.

இந்தியாவின் உள்நாட்டு விஷயத்தில் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் தலையிடுவது, அது குறித்துப் பேசுவதை இந்திய அரசு கட்டாயம் தடுக்க வேண்டும். அதற்குக் கட்டாயம் கடும் எதிர்வினையாற்ற வேண்டும்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்

வர்த்தகம் என்பதும், அதற்கான ஒப்பந்தம் என்பதும் மிக முக்கியம்தான். ஆனால், அதற்காக இறையாண்மையை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.

உலக அரங்கில், இந்தியா நம்பகமான… தனித்த நாடாக நிற்கிறது. ட்ரம்பின் இந்தச் செயல் இந்தியாவைப் பலவீனமாகக் காட்டலாம்.

இந்தியாவின் முடிவை இந்தியாதான் அறிவிக்க வேண்டுமே தவிர… அமெரிக்கா அல்ல.

இந்த விஷயத்தில் இந்திய அரசு அமைதியாக இருப்பது… ட்ரம்பின் பேச்சை உண்மையாக்குவது போல இருக்கிறது.

இதற்குக் கட்டாயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

Source link