டெல்லியில் நடைபெற்று வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்துக்கு ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சி.ஜே.பி போராட்டத்துக்கு ஆதரவாக அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் மாணவர் சேர்க்கையில் ஒரு சீரான தன்மை இருந்ததாலும், பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எனும் தங்கள் கனவை நனவாக்க உண்மையான வாய்ப்பை வழங்கியதாலும், நீட்தேர்வை நான் தனிப்பட்ட முறையில் ஆதரித்து வந்துள்ளேன்.
கடந்த 5 ஆண்டுகளில், நீட் இளங்கலைதேர்வு வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்ற நிலையில், மீண்டும் ஒருமுறை தேர்வு நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இது எத்தகைய மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In…
— K.Annamalai (@annamalai_k) July 22, 2026
இருப்பினும், இதற்கு காரணமானவர்களிடம் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை. மாணவர்களின் மனதில் ஏற்பட்ட அந்த மாற்றமும், தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்த வீதிக்கு வந்து போராடும் நிலைக்கு அவர்களைத் தள்ளியதும் அந்தத் தருணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜனநாயகத்தில் போராட்டம் என்பது ஒரு அடிப்படை உரிமை. ஆனால், இங்கே எழும் முக்கியமான கேள்வி இதுதான்: போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? எதற்காக இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்?
ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, ​​சுயநல நோக்கங்களைக் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பகாலக் கோரிக்கைகளுக்குத் தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் போராட்டத்தைத் திசைதிருப்ப முயல்வதோ இயல்பான ஒன்றுதான். அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்கும்போது, நீங்கள் மௌனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து நீங்க விலகிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். தயவுசெய்து அப்படி நடக்க அனுமதிக்காதீர்கள்.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு முறையான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவும், நிலவும் கவலைகளுக்குத் தீர்வு காண விரைவான மற்றும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் நான் வலியுறுத்துகிறேன். ஒரு நாட்டின் வலிமை என்பது அதன் நிறுவனங்கள் (என்.டி.ஏ) மீது அந்நாட்டு இளைஞர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது கல்வி முறையின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்தால், நாம் நமது நாட்டின் எதிர்காலத்தையே ஆபத்துக்குள்ளாக்குகிறோம் என்று பொருள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
