திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மூதாட்டியின் விரலை எலிகள் கடித்து துண்டாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் கீழகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ்குடி என்ற மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்பு சாதாரண வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் இன்று (23-07-26) காலை அவரது மகன், மருத்துவமனைக்கு வந்து தனது தாயாரை பார்த்தபோது அவருடைய கால் கட்டவிரலில் காயம் இருந்துள்ளது. இந்த காயம் ஏதோ ஒரு உயிரினம் கடித்தது போல் இருந்தது உடனடியாக இது குறித்து மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் மருத்துவர்கள் தமிழ்குடியின் காலில் ஏற்பட்ட காயத்தை பரிசோதனை செய்தனர். அதில் அவரது காலில் எலிகள் கடித்ததால் தான் இந்த காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டபோது இந்த சம்பவம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியை எலிகள் கடித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
