நள்ளிரவில் காரில் ஏறிய கரடி; கயிறு கட்டி இழுத்த நபர்

அமெரிக்காவின், கொலராடோ மாகாணத்தின் கோல்ட் ஹில் பகுதியில் நள்ளிரவு நேரத்தில், நின்றிருந்த கார் ஒன்றின்  ஹார்ன் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால், அண்டை வீட்டார் யாரோ வேண்டுமென்றே ஹார்னை ஒலிக்கிறார்கள் என்று அப்பகுதி மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். இருப்பினும், தொடர்ந்து எழுந்த அதிக சத்தத்தின் காரணமாக அப்பகுதி மக்கள் கோபமடைந்து, யார் ஹார்ன் அடிக்கிறார்கள்? என்பதை அறிய காரின் அருகே வந்தனர். அப்போது, காரின் உள்ளே முன் இருக்கையில் ஒரு கருப்பு நிற கரடி அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

அதாவது, காரின் பூட்டப்படாத கதவு வழியாக காருக்குள் ஏறிய அந்தக் கரடி, உள்ளே உணவுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்று ஆராய்ந்தது. அப்போது, காரின் கதவு எதிர்பாராத விதமாகத் தானாக மூடிக்கொண்டதால், கரடி உள்ளேயே சிக்கிக்கொண்டது. பின்பு, அந்த கரடி காரின் ​​முன் இருக்கையில் அமர்ந்து ஹார்ன் மீது சாய்ந்தபடி இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கரடியைக் கண்டு பயந்தனர். பின்பு, கரடியை எப்படி வெளியேற்றுவது என யோசித்துப் பாதுகாப்பான முறையைக் கையாண்டனர்.  

அதன்படி, ஒருவர் காரின் பின்பக்கக் கதவின் கைப்பிடியில் ஒரு நீண்ட கயிற்றைக் கட்டி, பாதுகாப்பான தூரத்திற்குச் சென்று கயிற்றை இழுத்து கதவைத் திறந்தார். அடுத்த சில நொடிகளில் கரடி வெளியேறி காட்டுக்குள் ஓடிவிட்டது. 

இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. செல்போனில் படம் பிடித்த இந்த வீடியோவை, வீட்டின் உரிமையாளர் பேட்ரிக் சல்லிவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டார்.   

இந்நிலையில், கரடிகள் கார்களின் கதவுகளை எளிதாகத் திறக்கும் என்பதால், பொதுமக்கள் காரின் கதவுகளை எப்போதும் பூட்டியே வைக்க வேண்டும் எனவும், காரின் உள்ளே எந்தவித உணவுப் பொருட்களையும் வைக்க வேண்டுமெனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Source link