குடும்ப தகராறில் கணவர் வீட்டாரை பழிவாங்க குற்ற வழக்கு தொடர்வதா?: சுப்ரீம் கோர்ட் கவலை

புதுடில்லி: கணவருடனான குடும்ப தகராறில், மாமியார் வீட்டு உறவினர்களை பழிவாங்கும் விதமாக, அவர்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் தொடரும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து சில ஆண்டுகள் ஆனதால், தந்தையின் பராமரிப்பிலேயே இருவரும் வாழலாம் என குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குழந்தைகளை சந்திக்க தாய்க்கு அனுமதி தரப்பட்டது.

இந்நிலையில் தன் மகனை, தந்தை வழி அத்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாய் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அப்பெண் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது .

மேல்முறையீடு மும்பை உயர் நீதிமன்றம், அப்பெண் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டதால், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கணவரிடம் இருந்து கடந்த 2023ல் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற்ற போதோ, அதற்கு முன்போ இது போன்ற குற்றச்சாட்டுகள் ஏதும் மனைவி தரப்பில் முன்வைக்கப்படவில்லை.

குடும்ப தகராறு காரணமாக, மனைவி வழி உறவினர்கள் மீது போலீசில் கணவர் புகார் அளித்தார். அடுத்த சில மணி நேரங்களுக்குள், கணவரின் சகோதரி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையிலும் நம்பகத்தன்மை இல்லை. நீதிமன்ற நடுவர் முன் பதிவு செய்யப்பட்ட சிறுவனின் வாக்குமூலத்திலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக எந்த தகவலும் இல்லை.

அதிர்ச்சி எனவே, இவ்வழக்கை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை. போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனின் அத்தை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிடுகிறோம். அப்பெண் மீது தொடர்ந்த போக்சோ வழக்கையும் ரத்து செய்கிறோம்.

குடும்ப தகராறில், மாமியார் வீட்டினரை பழிவாங்க வழக்குகளில் சிக்கவைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் குழந்தைகளே அதற்கு கருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link