பீஜிங்; தெற்கு சீனக்கடலில் வியட்நாம் சரக்கு கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் மாயமாகி உள்ளனர்.
இது பற்றிய விவரம் வருமாறு;
ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள பயரிகிராஸ் பவளப்பாறை அருகில் வியட்நாம் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலில் மொத்தம் 62 பேர் இருந்தனர்.
திடீரென சரக்கு கப்பல் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. கப்பலில் இருந்து கிடைக்கப் பெற்ற ஆபத்துக்கான சமிக்ஞைகளை தொடர்ந்து சீன மீட்புக் கப்பல் சம்பவ இடத்திற்கு சென்றது.
மொத்தம் 6 சீன கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் வியட்நாம் கப்பல் ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன. பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் 39 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காணாமல் போன 23 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.கப்பல் கடலில் மூழ்கியதற்கான காரணங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
