நியூசிலாந்து நாட்டிற்கு சட்ட விரோதமாகப் போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற சர்வதேச கும்பலின் முக்கியச் சதியை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, சர்வதேச சந்தையில் சுமார் ரூ. 5 கோடி மதிப்புடைய 10.99 கிலோ எஃபெட்ரின் (Ephedrine) வேதிப் பொருளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதற்குப் பின்னணியில் செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த ஜூலை 21 அன்று மும்பையில் உள்ள சர்வதேச கூரியர் மையத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ‘தரைப் பாய்கள்’ (Floor mats) எனப் போலியாக முத்திரையிடப்பட்டு அனுப்பப்படவிருந்த இரு பார்சல்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திச் சோதித்தனர்.
அதில் பாய்கள் மற்றும் துணிகளுக்கு இடையே மிகச் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ எஃபெட்ரின் கைப்பற்றப்பட்டது. அத்துடன் அந்த பார்சல்களில் இணைக்கப்பட்டிருந்த முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் போலி என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கிய அதிகாரிகள், போலி ஆவணங்கள் மூலம் இந்தச் சரக்கை அனுப்பிய நபரைக் கண்டறிந்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் முகாமிட்ட என்.சி.பி. குழுவினர், கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய எஸ். ஹமீத் என்பவரைக் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருட்களைப் பொதி செய்யப் பயன்படும் டிஜிட்டல் தராசு, சீலிங் மெஷின்கள், பிளாஸ்டிக் உரைகள், போலி அடையாள அட்டைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஹமீதிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், நியூசிலாந்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட மற்றொரு கூரியர் பார்சல் பற்றிய தகவல் வெளியானது. அதனடிப்படையில் ஜூலை 25 அன்று மகாராஷ்டிராவின் கல்யாண் பகுதியில் அந்த பார்சலை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், படுக்கை விரிப்புகள் மற்றும் புகைப்படச் சட்டங்களுக்குள் (Photo frames) மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3.99 கிலோ எஃபெட்ரினைப் பறிமுதல் செய்தனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/07/27/ephedrine-smuggling-new-zealand-2026-07-27-09-22-13.jpg)
சந்தேகத்தைத் தவிர்க்கும் பொருட்டு, ஹமீத் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையிலிருந்து நேரடியாகப் பார்சல்களை அனுப்பாமல், மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு நேரில் சென்று போலி முகவரிகள் மூலம் கூரியர் செய்து வந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள எஃபெட்ரின் என்பது குறைந்த அளவிலான மருத்துவப் பயன்பாடு கொண்ட வேதிப் பொருளாக இருந்தாலும், ‘மெத்தம்பேட்டமைன்’ எனப்படும் தீவிரப் பழக்கத்தை ஏற்படுத்தும் செயற்கைப் போதைப் பொருட்களைச் செய்ய சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது ஹமீது மேலதிக விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சர்வதேச கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் யார் என்றும், இந்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது என்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
