-நமது நிருபர் –
தெய்வத்திடம் நான் வைத்த பிரார்த்தனையும், எனது மகனின் கடின பயிற்சியும் அவனை கைவிடவில்லை; காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி தாய் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார்.
வாழ்த்து
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டின் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி, ஸ்னாட்ச் மற்றும் க்ளீன் அன்ட் ஜெர்க் சுற்றுகளில் (126 + 160) மொத்தம் 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கூலி வேலை பார்த்து
இந்த வெற்றி தொடர்பாக ராஜா முத்துப்பாண்டியின் தாயார் பேச்சியம்மாள் கூறியதாவது: கஷ்டப்பட்டு கூலி வேலை பார்த்து என்னென்ன செய்து கொடுக்க வேண்டுமோ அதனை செய்து கொடுத்தேன். 2026 ல் வெற்றி பெற்றது சந்தோஷமாக உள்ளது. 2015 ஜப்பான், மலேஷியா, ஆஸ்திரேலியா என பல நாடுகளுக்கு சென்று 7 பதக்கங்கள் பெற்று வந்துள்ளார். 2018 காமன்வெல்த் போட்டியில் விளையாடி 6வது இடம் வந்தார். 2022ம் ஆண்டு காலில் அடிபட்டதால் விளையாடவில்லை. 2026 ல் வெற்றி பெற்றது மிகவும் சந்தோஷம் எனக்கு. ஆனந்த கண்ணீர் வருகிறது. தெய்வம் கைவிடவில்லை. பிரார்த்தனை மகனை கைவிடவில்லை.
சந்தோஷம்
ராஜா முத்துப்பாண்டி தந்தை ரோடுமேன். நான் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றுகிறேன். கரிமருந்தில் தான் இரண்டு ஷிப்ட் வேலை பார்ப்பேன். குழந்தைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என இரண்டு ஷிப்ட் பணிபுரிந்துள்ளேன். ஓடி ஓடி வேலை பார்த்து எனது குழந்தைகளை நல்ல வர வேண்டும் என உழைத்தேன். கஷ்டமான சூழ்நிலை. குழந்தையை கொண்டு வர வேண்டும் என்ற வெறி. நிலைமையை விட்டுவிடக்கூடாது. மகனும் நல்ல பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார். அதனை விடக்கூடாது. குழந்தைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என ஊக்கம் கொடுத்தேன். இன்று பதக்கம் வென்றுவிட்டார்.சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.
